Tuesday 19 January 2021

யாழ்.பல்கலை. வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைக்க நிதி உதவி கோரல் – மாணவர் ஒன்றியம் அறிக்கை..!!!

SHARE


யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் மீளவும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவியைக் கோரி மாணவர் ஒன்றியம் அழைப்புவிடுத்துள்ளது.

இதுதொடர்பில் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து கடந்த 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு இடித்து அகற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியானது பல்கலைக்கழக மாணவர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம் மூலமாகவும் மாணவர்களின் போராட்டத்தின் மூலமாகவும் உலகத் தமிழர்களின் ஆதரவினாலும் மற்றும் ஏனைய மக்களின் ஆதரவுடனும் மீளக் கட்டுவதற்கு அனுமதிகிடைக்கப்பெற்று கட்டுமானப்பணிகள் ஆரம்பிப்பதற்கு காரணமாக அமைந்த அனைவருக்கும் முதற்கண் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

குறித்த தூபி மீள்நிர்மானமானது சமூக மயப்படுத்தப்பட்டு உள்ளமையை கருத்திற்கொண்டு ஆதரவு வழங்கும் அனைவரினதும் நிதிப்பங்களிப்புடன் அமைக்க எண்ணியுள்ளோம்.

இதற்கான நிதியானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கணக்கிலக்கம் 162100100000661 மக்கள் வங்கி, யாழ்ப்பாணம் பல்கலைகக்கழக கிளை மாத்திரம் கொண்டுவரப்பட்டு மாணவர் ஒன்றியத்தின் தலைமையில் கட்டுமானப்பணிகள் இடம்பெறும் என்பதை அறியத்தருவதுடன் குறித்த தூபி அமைப்பதற்கு அனைவரின் ஆதரவையும் வேண்டிநிற்கின்றோம்.

மேலும் 13.01.2021 திகதி இடப்பட்ட மாணவர் ஒன்றியத்தின் நிதி சேகரிப்பு அறிக்கையானது முதற்கட்ட அறிவுறுத்தல் அறிக்கையாகும். என்பதை மாணவர் ஒன்றியம் அறியத்தருகின்றது.

அது மட்டுமல்லாது இதுவரை காலமும் 19.01.2021 வரை மாணவர் ஒன்றியத்தினால் நிதி சேகரிப்பு இடம்பெறவில்லை என மாணவர் ஒன்றியம் அறியத்தருகின்றது.

எந்தவொரு நிதியும் பல்கலைக்கழ மாணவர் ஒன்றிய கணக்குக்கு மாத்திரமே கொண்டு வரப்பட்டு தூபி அமைக்கப்படும் ஏனைய எந்த ஒரு நிதி கையாள்கைக்கும் மாணவர் ஒன்றியம் ஒருபோதும் பொறுப்புக்கூறமுடியாது என்பதை அறியத்தருகின்றோம் – என்றுள்ளது.

SHARE