Friday 30 July 2021

21 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்த தம்பதியை சேர்த்து வைத்த உச்சநீதிமன்றம்..!!!

SHARE




இந்தியாவில் குடும்ப பிரச்னையால் பிரிந்த தம்பதியை 21 ஆண்டுகளுக்குப் பின் உச்ச நீதிமன்றம் சேர்த்து வைத்தது.

இந்திய மாநிலம் ஆந்திர பிரதேசத்தில், குண்டூர் மாவட்டத்தில் 1998-ல் திருமணம் நடந்த தம்பதிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. இவர்களுக்கு ஒரு மகன் பிறந்த நிலையில் 2000-ஆம் ஆண்டில் இருவரும் பிரிந்தனர்.வரதட்சணை கேட்டு தன்னை கணவனும் மாமியாரும் துன்புறுத்துவதாக கூறி 2001-ஆம் ஆண்டு பொலிஸில் பெண் புகார் செய்தார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் கணவனுக்கு ஒரு ஆண்டு சிறையும் அபராதமும் விதித்தது.

தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கணவன் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கணவனுக்கு விதிக்கப்பட்ட ஒரு ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்தது.

இதற்கிடையே விவாகரத்து கோரி மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் கணவன் வழக்கு தொடர்ந்தார். கணவனுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனைவியும் மனு தாக்கல் செய்தார். வழக்கு தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது.

இந்நிலையில், 21 ஆண்டுகள் கழித்து, இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன் 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக நடந்தது. அப்போது மனு தாக்கல் செய்த பெண் நீதிபதிகள் முன் ஆஜரானார்.

அவரிடம் நீதிபதிகள் கூறியதாவது: உங்கள் கணவரை சிறையில் அடைப்பதால் உங்களுக்கு என்ன லாபம். சிறையில் அடைக்கப்பட்டால் கணவரின் வேலை பறிபோய்விடும். அதன்பின் அவரால் உங்களுக்கு ஜீவனாம்ச தொகை கூட வழங்க முடியாது. இதற்குப் பதில் கணவரை மன்னித்து சேர்ந்து வாழுங்கள். உங்கள் குழந்தையையும் நன்றாக வளர்க்க முடியும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

இதை கேட்ட பெண் மனம் மாறி கணவருக்கு சிறை தண்டனை வழங்க கோரி தாக்கல் செய்த மனுவை திரும்ப பெறுவதாக கூறினார். விசாரணையின் போது ஆஜரான கணவனும் மனைவியை விவாகரத்து செய்ய தொடர்ந்த வழக்கை திரும்ப பெற சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து 21 ஆண்டுகளுக்குப் பின் இருவரும் மீண்டும் இணைந்தனர்.
SHARE