Wednesday 8 June 2022

இந்தியன் 2 மீண்டும் தொடங்குமா?

SHARE

விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின்னர் கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இந்தியன்-2 படம் முடிவடையும் தருவாயில் படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கொரோனா பொது முடக்கம் காரணமாக படப்பிடிப்பையும் தொடர முடியாத சூழல் உருவானது.

பொது முடக்கத்திற்கு பின் கமல்ஹாசன் விக்ரம் படத்தில் நடிக்க போனார். இயக்குநர் ஷங்கர் தெலுங்கு படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமானார். இந்தியன்-2 படத்தை முடித்து கொடுக்காமல் ஷங்கர் வேறு படங்களை இயக்க கூடாது என்று லைகா நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பிரச்சினையை நீதிமன்றத்துக்கு வெளியில் இருதரப்பும் பேசி சுமுகமான முடிவுக்கு வருமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதன் காரணமாக கமல்ஹாசன், ஷங்கர், லைகா சுபாஷ்கரன் இடையே சுமுகமான சூழல் நீடித்து வந்தது. இந்த நிலையில் தான் படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொள்வதற்காக லைகா நிறுவனர் சுபாஸ்கரன் சென்னை வந்திருந்தார். அப்போது கமல்ஹாசன் - லைகா நிறுவனத்திற்கு இடையிலான சிக்கல்கள், அதனை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை உதயநிதி ஸ்டாலின் ஏற்பாட்டில் நடந்திருக்கிறது.

பேச்சுவார்த்தை முடிவில் இந்தியன் 2 படத்தை முடித்துத் தரவேண்டும் என்கிற லைகாவின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு அதை உடனடியாகச் செய்துதரவும் கமல்ஹாசன் தரப்பில் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

அதோடு, முதலில் பல்ராம் நாயுடு அதன்பின் தலைவன் இருக்கிறான் ஆகிய படங்களைக் காரணமாகக் காட்டி சுமார் அறுபது கோடி ரூபாயை லைகா நிறுவனத்திடமிருந்து முன் தொகையாக வாங்கியுள்ளார் கமல்ஹாசன்.

அந்தப் பணத்துக்கு என்ன பதில்? என்கிற கேள்வி வந்தபோது,விக்ரம் படம் தயாரிப்பில் இருக்குபோதே மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் அவர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் என கூறப்பட்ட அந்தபடத்தை முதல்பிரதி அடிப்படையில் தயாரித்து லைகா நிறுவனத்திற்கு தருவதாக கமல்ஹாசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை லைகா தலைவர் சுபாஷ்கரன் ஏற்றுக்கொண்டுள்ளா.ர் இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னரே டான் படத்தின் வெற்றி விழா நிகழ்வில் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முடிக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார் என்கின்றனர் திரைத்துறை வட்டாரத்தில்.

SHARE