Showing posts with label sri lanka news. Show all posts
Showing posts with label sri lanka news. Show all posts

Wednesday, 4 October 2023

லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு..!!!

லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு..!!!



லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அதன் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 343 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய 3470 விலை ரூபாய் ஆகும்.

அதேபோல், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 137 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 1393 ரூபாவாகும்.

அத்துடன் 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 63 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 650 ரூபாவாகும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
யாழில் மனித சங்கிலி போராட்டம்..!!!

யாழில் மனித சங்கிலி போராட்டம்..!!!


முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாண நகர் வரையில் நீளுகின்ற ஓர் மனித சங்கிலி போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ் மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி என்பன ஆதரவு வழங்கி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.















Tuesday, 3 October 2023

காங்கேசன்துறை மாங்கொல்லையில் இராணுவத்தினர் வெளியேறிய காணிகளுக்கு வேலி அடைக்க அனுமதி..!!!

காங்கேசன்துறை மாங்கொல்லையில் இராணுவத்தினர் வெளியேறிய காணிகளுக்கு வேலி அடைக்க அனுமதி..!!!


யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில், இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள காணிகளை உரிமையாளர்கள் வேலி அடைத்து அறிக்கைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 33 வருட காலமாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட மாங்கொல்லை பகுதியில் இருந்து கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தினர் வெளியேறி உள்ளனர். ஆனாலும் குறித்த பகுதி இராணுவத்தினரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவில்லை.

அதனால் அக்காணி உரிமையாளர்கள் அப்பகுதியில் குடியமர முடியாத நிலை காணப்படுகிறது.

அந்நிலையில் அப்பகுதிக்குள் ஊடுருவும் இரும்பு திருடர்கள் வீடுகளில் உள்ள இரும்புகளை திருடி சென்றனர். அது குறித்து தெல்லிப்பழை பிரதேச செயலர் , காங்கேசன்துறை பொலிஸார் உள்ளிட்ட தரப்பினருக்கு பல தடவைகள் வீட்டு உரிமையாளர்கள் முறைப்பாடு செய்தும் திருட்டினை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் , இரும்பு திருடர்கள் சுதந்திரமாக அப்பகுதிகளில் நடமாடி திரிகின்றனர்.

இந்நிலையில் காணி உரிமையாளர்கள் தெல்லிப்பழை பிரதேச செயலரிடம் , தமது காணிகளுக்குள் ஊடுருவும் திருடர்களை கட்டுப்படுத்தும் முகமாக தமது காணிகளை சுற்றி வேலி அடைத்து , அக்காணிகளை அறிக்கைப்படுத்த அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதனை அடுத்து அப்பகுதியில் தமது காணிகளை சுற்றி வேலி அடைக்க பிரதேச செயலர் அனுமதி அளித்துள்ளார்.

அதேவேளை 33 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருந்த மாங்கொல்லை வைரவர் ஆலய திருத்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஆலயத்திற்கு மின்சார இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




யாழ். சாவகச்சேரியில் 200 ஆண்டுகள் பழைமையான மரம் சாய்ந்தது..!!!

யாழ். சாவகச்சேரியில் 200 ஆண்டுகள் பழைமையான மரம் சாய்ந்தது..!!!


யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர் பகுதியில், மரம் முறிந்து விழுந்தமையால் , யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலை ஊடான போக்குவரத்து சுமார் 30 நிமிடங்கள் தடைபட்டு இருந்ததுடன் , நகருக்கான மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகர் பகுதியில் நின்ற சுமார் 200 வருட காலத்திற்கு மேற்பட்ட வேப்ப மரம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை முறிந்து வீதிக்கு குறுக்கே விழுந்துள்ளது.

அதனால் யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலை ஊடான போக்குவரத்து தடைப்பட்டது. அத்துடன் மின்சார வயர்களுக்கும் மேலும் மர கிளைகள் விழுந்தமையால் , மின்சார கம்பங்கள் முறிவடைந்ததுடன் , நகர் பகுதிக்கான மின்சாரமும் தடைப்பட்டது.

அத்துடன் மரத்திற்கு கீழ் இருந்த அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பு டிக்கெட் விற்கும் கடையும் சேதமடைந்ததுடன் , மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமடைந்துள்ளது.

சாவகச்சேரி நகர சபை , இலங்கை மின்சார சபையினர், நகர் பகுதி வர்த்தகர்கள், பொதுமக்கள் ஆகியோர் இணைந்து முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தியதுடன் , வீதி ஊடான போக்குவரத்தை சீர் செய்தனர்.





யாழ்ப்பாணத்தில் நீதிமன்ற நடவடிக்கைகள் முடக்கம்..!!!

யாழ்ப்பாணத்தில் நீதிமன்ற நடவடிக்கைகள் முடக்கம்..!!!


முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, வடக்கு - கிழக்கு மாகாணங்கள் முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் இன்றையதினம் முடக்கப்பட்டுள்ளன. இதனால் யாழ்ப்பாணம் நீதிமன்றவளாக செயற்பாடுகளும் முற்றாக முடங்கின.

யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு திங்கட்கிழமை (02) ஒன்றுகூடி முக்கிய பல தீர்மானங்களை எடுத்திருந்தனர். இதன்போதே முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா தொடர்பிலும், நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தி சட்டவாட்சியை நிலைநாட்டவும் ஏதுவாக இன்றும் நாளையும் சட்டத்தரணிகள் வடமாகாண நீதிமன்ற நடவடிக்கைகளை பகிஷ்கரிப்பது என தீர்மானம் எடுத்திருந்தனர்.

நாளையும் (04) யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணிகள் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.