யாழ்ப்பாணத்தில் காணப்படும் பதிவு செய்யப்படாத படகுகளை பதிவு செய்யும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய, கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளினால் கடந்த சில தினங்களாக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்மூலம், கடந்த காலங்களில் பருவகால மீன்வர்களிடமிருந்தும் தென்னிலங்கை பிரதேசங்களில் இருந்தும் யாழ். மாவட்ட மீனர்வர்களினால் கொள்வனவு செய்யப்பட்ட நிலையில் கடற்றொழில் திணைக்களத்தில் பதிவுசெய்யப்படாமல் இருந்த சுமார் 183 படகுகள் பதிவு செய்யப்படுகின்றன.
அண்மைக்காலமாக அதிகரித்துள்ள கடல் வழி போதைப் பொருள் உட்பட்ட கடத்தல் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகளினால் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளின்போது, பதிவு செய்யப்படாத படகுகிகளைப் பயன்படுத்துகின்ற கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அசெகரியங்கள் நீங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், படகுகளைப் பதிவுசெய்வதன் மூலம், குறித்த படகுகளுக்கு காப்புறுதி செய்வதற்கும் அவசியத் தேவைகளின் போது வங்கிக் கடன்களைப் பெற்றுக் கொள்ளுதல் உட்பட பல்வேறு நன்மைகளை கடற்றொழிலாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று, வடக்கின் ஏனைய கடற்றொழில் மாவட்டங்களிலும் பதிவுசெய்யப்படாத படகுகள் காணப்படுகின்ற நிலையில், அவை அனைத்தையும் பதிவுசெய்யும் நோக்கில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய விசேட அணி செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
