Tuesday 19 March 2024

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற குற்றச்சாட்டில் பெண் கைது..!!!

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற குற்றச்சாட்டில் பெண் கைது..!!!



முல்லைதீவு - விஸ்வமடு இளங்கோபுரம் பகுதியில் தகாத உறவினால் பிறந்த குழந்தையை கொன்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கணவரைப் பிரிந்து வாழும் இந்த பெண் ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர் .

மூன்று நாட்களுக்கு முன்னர் குழந்தையைப் பெற்றெடுத்து அதனைக் கொன்றதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து இவர் கைது செய்யப்பட்டார் .

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக வடக்கில் 254 கோடி ரூபாய் மோசடி..!!!

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக வடக்கில் 254 கோடி ரூபாய் மோசடி..!!!



வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி வடமாகாணத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு 254 கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பில் 139 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்னர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ் மற்றும் காங்கேசன்துறை பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதியில் 51 கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பில் 44 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் 15 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் பொலிஸ் பிராந்தியத்தில் 46 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ள நிலையில் , அது தொடர்பில் 17 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் 08 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா பொலிஸ் பிராந்தியத்தில் 116 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ள நிலையில் , அது தொடர்பில் 53 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் 30 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு பொலிஸ் பிராந்தியத்தில் 33 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ள நிலையில் , அது தொடர்பில் 20 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பொலிஸ் பிராந்தியத்தில் 5 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ள நிலையில் , அது தொடர்பில் 5 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிசார் தெரிவித்தனர்.

வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வைப்பதாக கூறி மோசடியில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் மக்கள் விழிப்படையும் போதே , இவ்வாறான மோசடியான நபர்களிடம் இருந்து தமது பணத்தினை பாதுகாத்து கொள்ள முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை ; வழக்கு தள்ளுபடி..!!!

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை ; வழக்கு தள்ளுபடி..!!!



வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் இன்று செவ்வாய்க்கிழமை (19) வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து அவர்கள் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அது தொடர்பான வழக்கு இன்றையதினம் நீதிமன்றில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த 8 பேரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்த நீதிபதி வழக்கினையும் தள்ளுபடி செய்தார்.

குறித்த வழக்கில் ஆலயநிர்வாகம் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணிகளான என்.சிறிகாந்தா, அன்ரன் புனிதநாயகம், அருள், க.சுகாஸ், தலைமையில் பல சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.
இன்றைய ராசிபலன் - 19.03.2024..!!!

இன்றைய ராசிபலன் - 19.03.2024..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பிக்கல் பிடுங்கள் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் கடமைகளை சரியாக செய்ய விடாமல் தடுப்பதற்கு சில பேர் பிளான் பண்ணுவாங்க. அந்த சிக்கலில் இருந்து தப்பித்து சாதுரியமாக உங்களுடைய வேலையை முடிப்பீர்கள். திறமை வெளிப்படக்கூடிய நாள் எது? எவ்வளவு போராட்டம் இருந்தாலும் கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் உங்களுக்கு நிச்சயம் பாராட்டுகளும் கிடைக்கும். மனது மகிழ்ச்சி அடையும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மணக்குழப்பம் நிறைந்த நாளாக இருக்கும். புது முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். புது முயற்சிகளையும் இன்று எடுக்க வேண்டாம். அன்றாட வேலையில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தினால் போதும். சகோதர சகோதரிகள் ஒற்றுமை உண்டாகும். வீடு வாகனம் சொத்து சுகம் வாங்குவதற்கான பேச்சு வார்த்தைகளை நடத்துவது நன்மையை கொடுக்கும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்தையும் சுலபமாக எடுத்துக் கொள்ள வேண்டும். விளையாட்டாக யாராவது பேசினால், அதை விளையாட்டாக எடுத்துக் கொள்ளுங்கள். முன் கோபப்படாதீர்கள். அடுத்தவர்களை எடுத்தெறிந்து பேசுவதன் மூலம் நல்ல உறவுகள் நல்ல நண்பர்களை இழப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் செய்யக்கூடாது. வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளுடன் பணிவோடு நடக்கவும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். திறமைகள் வெளிப்படும். நீங்களே ஆச்சரியப்படும் அளவுக்கு சில சதுரயமான வேலைகளை செய்வீர்கள். முதலீடு செய்வது நன்மையை தரும். எதிர்காலத்தில் நல்ல லாபத்தை ஈட்டித் தரக்கூடிய தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நிதி நிலைமை உயரும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று குறிக்கோள்களை அடையக்கூடிய நாளாக இருக்கும். லட்சியம் நிறைவேறும். விடாப்பிடியாக சில விஷயங்களை அடம்பிடித்து சாதிப்பீர்கள். வாழ்க்கையில் எதிர்காலத்துக்கு தேவையான சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். வீட்டு பெரியவர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாள் இது.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும். எந்த வேலையையும் சுலபமாக முடிக்க முடியாது. அதற்காக அன்றாட வேலையை கை கழுவி விடவும் முடியாது. ஆகவே சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வைத்து விட்டு, ஒரு உறுதி மொழியை மனதில் எடுத்துக்கொண்டு, தைரியத்தோடு வாழ்க்கையில் முன்னோக்கி செல்லுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் நிறைந்த நாடாக இருக்கும். புது விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். மாணவர்களுடைய திறமைகள் வெளிப்படும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். கடன் சுமை நீங்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். மனதிற்கு பிடித்த பொருளை வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிகிடையே இருந்து வந்த சண்டை சச்சரவுகளும் விலகும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் செய்யாத தவறுக்கு உங்கள் மேல் பழி விழுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நண்பர்களாக இருந்தாலும், உறவுகளாக இருந்தாலும் அவர்களிடம் கொஞ்சம் உஷாராக பழகுங்கள். அரசாங்கத்துக்கு புறம்பான காரியங்களை செய்ய வேண்டாம். பொய் சொல்லி எந்த விஷயத்தையும் செய்யாதீங்க. எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக பேசுங்கள். நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று இருப்பீர்கள். குறிப்பாக உயர் அதிகாரிகளுக்கு இன்று வேலை பளு அதிகமாக இருக்கும். உங்கள் கீழ் பணிபுரிபவர்களை சமாளிக்கவே முடியாது. சொந்த தொழில் செய்பவர்களுக்கு பெரிய பிரஷர் இருக்கும். வேலை செய்பவர்கள் முன்னுக்கு பின்னாக முரண்பாடாக நடந்து கொள்வார்கள். அவர்களை கையாளும்போது கவனம் தேவை.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று பொறுப்போடு நடந்து கொள்வீர்கள். எந்த ஒரு வேலையை கொடுத்தாலும் சொன்ன நேரத்திற்கு முடித்துக் கொடுப்பீர்கள். வாக்கு தவறாமல் நடந்ததால் பாராட்டுகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பதவி உயர்வு சம்பள உயர்வு சில பேருக்கு கிடைக்கும். வண்டி வாகனங்களில் செல்லும்போது மட்டும் கவனமாக இருங்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று நிறைய எதிர்ப்புகளை பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். எங்கிருந்துதான் உங்களுக்கு இன்று பிரச்சனைகள் வருமோ, தெரியாது. ஆனால் சந்தோஷமாக ஐந்து நிமிடம் அமர்ந்து சிரித்து பேசினால், அடுத்த 10 நிமிடத்தில் பிரச்சனைகள் பரபரப்பாக வரத் தொடங்கி விடும். அப்படிப்பட்ட சூழ்நிலைதான் இன்று உங்களுக்கு வரும். மனதை தைரியமா வச்சுக்கோங்க.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று வேலை சுமை கொஞ்சம் அதிகமாக இருக்கும். இருந்தாலும் உங்களுடைய திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கிறது. நிதி நிலைமை மோசமாக இருந்தாலும், பெரிய அளவில் பாதிப்பை கொடுக்காது. எல்லா பிரச்சனையையும் சமாளிக்க கூடிய மன வலிமை உங்களிடத்தில் இருக்கும். மனைவியை எதிர்த்துக் கொள்ளாதீர்கள். அனுசரித்து சென்றால் வாழ்க்கையில் பெரிய அளவில் சாதிப்பீர்கள்.

Monday 18 March 2024

கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவித்தல்..!!!

கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவித்தல்..!!!


நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலைகளில் நடாத்தப்படுகின்ற இல்ல விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வெளிகள நடவடிக்கைகளை ஏப்ரல் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் நடத்துமாறு பாடசாலைகளின் அதிபர்களுக்கு கல்வி அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று (18) சுற்றறிக்கை வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார்.

தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பஸ் மோதியதில் 4 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு..!!!

பஸ் மோதியதில் 4 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு..!!!


வவுனியா பூவரசங்குளத்தில் இன்று(18) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவிலிருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த தனியார் பஸ், தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது அதில் ஏறுவதற்கு முயன்ற 76 வயதான ஒருவரை மற்றுமொரு பஸ் மோதியுள்ளது.

4 பிள்ளைகளின் தாயே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.

சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.