Sunday 15 November 2020

யாழில் வீட்டு முற்றத்தில் நின்ற தென்னை மரத்தை இயந்திர வாளால் அரிந்து விழுத்திய நாசகார கும்பல்..!!!

SHARE


யாழ்.கொக்குவில் - பூநாறிமடம் பகுதியில் உள்ள வீட்டு முற்றத்தில் நின்ற தென்னை மரம் ஒன்றை விசமிகள் இயந்திர வாளினால் அரிந்து வீழ்த்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

பூநாறிமடம் 3வது ஒழுங்கையில் வீதியோரம் வீட்டு வளவிற்குள் நின்ற தென்னையே நேற்றுமுன்தினம் அதிகாலை 12.30 மணியளவில் அரிந்து வீழ்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு வீழ்த்தப்பட்ட தென்னை மரம் அருகில் இருந்த மின் கம்பம் மீது சாய்ந்து மின் கம்பமும் உடைந்து வீழ்ந்ததோடு பிரதான மின் இணைப்புக் கம்பிகள் யாவும் அறுந்து வீழ்ந்துள்ளன.

இதன்போது குறித்த நாசகாரச் செயலை செய்த கும்பல்  அங்கிருந்து தப்பியோடியுள்ளது. இதன்போது விழுந்த தென்னை மரம் வீதியோரம் இருந்த மாதா  சொரூபத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு ஏற்படுத்தப்பட்ட சேதங்களின்போது அப் பகுதி முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதோடு 10 மணி நேரத்தின் பின்பு மின் இணைப்பு மின்சார சபையின் நீண்ட முயற்சியினால் ஏற்படுத்தப்பட்டது.

இதேநேரம் குறித்த வீட்டில் கடந்த யூன் 14ஆம் திகதியும் இதேபோன்று ஒரு தென்னை விசமிகளால் இரவோடு இரவாக வீழ்த்தப்பட்டமை தொடர்பில் பொலிசாரின் விசாரணை இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



 
SHARE