Thursday 26 November 2020

வெள்ளத்தில் மூழ்கியது பிக்பொஸ் வீடு..!!!

SHARE

இந்திய தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் பிக்பொஸ் நிகழ்ச்சியின் வீடு வெள்ளத்தில் மூழ்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இருதினங்களாகப் பெய்து வந்த கனமழை காரணமாக சென்னை பூந்தமல்லி பகுதியிலுள்ள பிக்பொஸ் வீட்டை மழை நீர் சூழ்ந்திருக்கிறது. வீட்டின் கார்டன் ஏரியா, நீச்சல் குளம் முழுக்க தண்ணீர் புகுந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டதாலும் (ஏரிக்கும் பிக்பொஸ் வீடு அமைந்திருக்கும் இடத்துக்குமிடையிலான தூரம் சில கிலோ மீட்டர்கள் தான்) நேற்று காலையிலிருந்தே ஒருவித அசாதாரண சூழல் அந்த வீட்டுக்குள் நிலவியிருக்கிறது.

நிலைமையை உணர்ந்து கொண்ட தொலைக்காட்சி நிர்வாகம் துரிதமாகச் செயல்பட்டு பூந்தமல்லியில் அமைந்திருக்கும் பிரபல தனியார் ஹோட்டலில் போட்டியாளர்களைத் தங்க வைக்க முடிவு செய்துள்ளது.

அதன்படி நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் போட்டியாளர்கள் அத்தனை பேரும் பத்திரமாக நான்கு வாகனங்களில் அதி தீவிரப் பாதுகாப்புடன் அந்த ஹோட்டலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

நேற்று இரவு முழுக்க அந்த ஹோட்டலில் தான் தங்கியிருந்தனர் போட்டியாளர்கள்.

தற்போது தண்ணீரை வெளியேற்றும் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அந்த வேலைகள் முடிவடைந்தால் போட்டியாளர்கள் இன்று இரவு மறுபடியும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வார்கள்.

இந்த மழை சூழலால் நேற்று ஒளிபரப்பாக வேண்டிய காட்சிகளில் பலவற்றை எடுத்து இன்று ஒளிபரப்ப திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
SHARE