முண்டாசுக் கவிஞன் பாரதியின் 138ஆவது பிறந்த தின நினைவுதினம் இன்று யாழில் கொண்டாடப்பட்டது. யாழில் உள்ள இந்திய துணைத் தூதுவர் அலுவலகத்தினால் இந்நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டு நல்லூர் ஆலயத்திற்கு பின்பக்க வீதியிலுள்ள பாரதியார் நினைவுச் சிலையின் அடியில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் மீசைக்கவிஞன் பாரதிக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் solve நிறுவன ஸ்தாபகர் திருமதி பவதாரணி ராஜசிங்கம் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து ஊடகமொன்றுடன் உரையாடிய அவர் தமிழ்மக்களின் மறக்கமுடியாத அடையாளம் என பாரதியை அடையாளப்படுத்தினார். அத்துடன் அவனது வரவே இன்று நாமெல்லாம் உங்கள் முன்நின்று பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த கலாசார அடையாளங்களை கட்டிகாப்பது நமது கடமை என கூறினார்.
வடக்கு மாகாணசபையின் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் யாழ் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னால்ட், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், எம்.கே.சிவாஜிலிங்கம் , மாவை சேனாதிராஜா மற்றும் அனந்தி சசிதரன், சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.