பிசிஆர் பரிசோதனை அறிவித்தல் வடமாகாணத்தில் சீர்செய்யப்படுமா?




யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் பி. சி. ஆர் பரிசோதனை முடிவுகளை உத்தியோக பூர்வமாகவெளியிடுவதில் பல குழப்பங்கள்  காணப்படுகின்றன. அதிகாரப் போட்டியின் காரணமாக அதிகாரிகளின் அறிக்கைகள் முன்னுக்குப் பின் முரணாகக் காணப்படுவது, அப்பாவிப் பொதுமக்களிடையே பெரும் குழப்பமான நிலையைத் தோற்றுவித்திருக்கிறது.

அனைத்து மாகாணங்களிலும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரால் பி. சி. ஆர் பரிசோதனை முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும். எனினும் வடக்கு மாகாணத்தில்சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கிடைப்பதற்கு முன்னர் ஆய்வுகூடங்களில் இருந்தும், வைத்தியசாலையில் இருந்தும்  வெளியாகிவிடும்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மேற்கொள்ளப்படும் பி. சி. ஆர் பரிசோதனை முடிவுகள், வடக்கு மாகாணத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மூலமாகவே வெளியிடப்படும் என்று எழுத்துமூல ஆவணம் ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது.

எனினும், அன்றன்றைய முடிவுகளைத் தொகுத்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், தனது முகநூல் வாயிலாக வெளியிடுவது வழக்கமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் இன்று மருதனார்மடம் சந்தை வியாபாரிகள் மற்றும் அவர்களுடைய சுற்றயல் ஆள்களின்  பி. சி. ஆர் பரிசோதனையின் உத்தியோகபூர்வ முடிவுகள் வருவதற்கு முன்பாகஆய்வுகூட தகவலின் அடிப்படையில் பல இணைய ஊடகங்கள் “மருதனார்மடம் பொதுச் சந்தைகொத்தணியில் 31 பேருக்கு தொற்று உறுதி” என்ற செய்தியை வெளியிட்டன.

எனினும், ஆய்வுகூட தகவல் வெளிவந்து சுமார் ஒரு மணி நேரத்தின் பின்,  யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலை பணிப்பாளர் தனது முகநூலில் மருதனார்மடம் சந்தையில் நேற்றுகண்டறியப்பட்டவரின் குடும்ப உறவினர்கள் 6 பேருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டதுஎன்ற செய்தியைப் பகிர்ந்தார்.

அதன் பின், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அனுப்பப்பட்ட உத்தியோகபூர்வ முடிவும் வெளியிடப்பட்டது.

இன்று பெறப்பட்ட மாதிரிகளில் பலரது மாதிரிகளில் ஆய்வுக்குத் தேவையான கூறுகள் போதாதுஎனக் குறிப்பிட்டு அவர்களிடம் மாதிரிகள் திரும்பப் பெறுமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர்த.சத்தியமூர்த்தி தனது முகநூலில் மற்றொரு பதிவை வெளியிட்டுள்ளார்.

“தொடர்ந்து வரும் நாட்களில் மேலும் பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள்அதிகமாக இருக்கின்றது. இவர்களில் சிலருக்கு தொற்று இருக்கலாம் என எதிர்வு கூறப்பட்டாலும்எதிர்வரும் நாட்களில் பரிசோதனை முடிவுகள் வெளியாகும் போது மாத்திரம் தொற்று எண்ணிக்கைபற்றி உறுதிபட கூற முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே உத்தியோகபூர்வ முடிவை வெளியிடும் போது மருத்துவத் துறையின் அறிவுசார் மாற்றங்கள்இருக்க முடியும். ஆனால் உத்தியோகபூர்வ முடிவை ஒரே தடவையில் ஊடகங்களுக்கு வழங்குவதுபொறுப்புள்ளவர்களின் கடமையாகும்.

Put your ad code here

Previous Post Next Post