கொழும்பு நகரில் பதிவாகின்ற கொவிட் தொற்றாளர்களில் அதிகளவானோர் கொழும்பு நகரில் கடமையாற்றுவோர் என்ற போதிலும், கொழும்பில் நிரந்தரமாக தங்கியுள்ளவர்கள் அல்லவென கொழும்பு பிரதேச தொற்று நோய் தடுப்பு விசேட வைத்தியர் தினுகா குருகே தெரிவிக்கின்றார்.
அத தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு நகரில் 4 வீதமான கொவிட் தொற்றாளர்களே அடையாளம் காணப்படுவதாக கொழும்பு மாநகர சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவிக்கின்றார்.
கொவிட் 2வது அலை ஏற்பட்ட கடந்த ஒக்டோபர் மாதத்தின், கொவிட் வைரஸ் காட்டு தீயை போல பரவியதாகவும், இந்த முறை அவ்வாறு பரவவில்லை எனவும் அவர் கூறுகின்றார்.
கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டமையே, அதற்கான காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பில் நிரந்தரமாக தங்கியிருக்காத, ஆனால் கொழும்பில் வேலை செய்கின்றவர்களே, கொவிட் தொற்றுக்கு இலக்காவதாக டொக்டர் தினுகா குருகே குறிப்பிடுகின்றார்.
அத்துடன், கொழும்பு நகரிலுள்ள நிறுவனங்களில் சிறிய கொவிட் கொத்தணிகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, கொழும்பில் மிகவும் கட்டுபாடுகளுடன் இருக்கின்றமையினாலேயே, கொழும்பு மாநகர எல்லை பாதுகாக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க குறிப்பிடுகின்றார்.