"அக்கறை உள்ளோர் எந்த மாவட்டத்திற்கும் சென்றும் பார்க்கலாம். அக்கறை இல்லாதோர் வீட்டிலிருந்து எதையும் கதைக்கலாம்" என நாமல் ராஜபக்சவின் யாழ் வருகை தொடர்பில் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சிக்கு வியஜம் மேற்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனிடம், நாமல் ராஜபக்சவின் யாழ் வருகை தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவிய போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நாமல் ராஜபக்ச விளையாட்டுத்துறை அமைச்சர்தான். ஆனால் கோவிட் ஒழிப்பு செயலணியில் அவர் முக்கிய இடத்தில் உள்ளார். அவர் அனைத்து மாவட்டத்திற்கும் சென்று நிலைமைகளை பார்வையிடுகின்றார். அக்கறை உள்ளோர் எந்த மாவட்டத்திற்கும் சென்றும் பார்க்கலாம். அக்கறை இல்லாதோர் வீட்டிலிருந்து எதையும் கதைக்கலாம்.
மக்களை வந்து பார்ப்பவர்கள் மீது குறை சொல்லிக்கொண்டிருப்பது நியாயமற்றது. யார் வந்து பார்த்தாலும் எமது மக்களிற்கு உதவியாக இருக்கும். அவர் வந்து பார்த்ததால் மேலும் 50 ஆயிரம் ஊசிகளை பெற்றுக்கொள்ள வசதியாக இருக்கின்றது.
நாங்கள் குறை கூறுவதை விட்டுவிட்டு யார் வந்து பார்த்தாலும் எமக்கு நல்லதே என்பதை உணர வேண்டும்" எனவும் அவர் குறிப்பிட்டார்
Tags:
sri lanka news