நாட்டில் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்ற நிலையில் , நேற்று மாத்திரம் 48 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன.
இலங்கையில் கொவிட் பரவல் ஆரம்பித்த நாள் முதல் நாளொன்றில் பதிவாகிய அதிகூடிய மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும்.
இந்த 48 மரணங்களில் 18 மரணங்கள் வீடுகளிலேயே பதிவானவை என்பது குறிப்பிடத்தக்கது.
இம் மரணங்கள் மே மாதம் 11 ஆம் திகதி முதல் இம்மாதம் 3 ஆம் திகதி வரை பதிவானவையாகும். இவ்வாறு கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களில் பொகவந்தலாவை, மஸ்கெலியா, முதுங்கொடை, கொழும்பு-13, கொலன்னாவை, களுத்துறை வடக்கு, மத்துகம, கிரிமெட்டிய, கண்டி, நாவான, ரதாவன, இராஜகிரிய, கொழும்பு-10, திஹாரிய, அத்தனகல்ல, வெலிஓயா, றாகம, யட்டவத்தை, ஜல்தர, நுவரெலியா, கல்பாத்த, துன்மோதர, பஸ்யால, கல்கமுவ, மெகொடவேவ, கல்னேவ, ஹொருவில, அவிசாவளை, புப்புரஸ்ஸ, தோரயாய, மெல்சிரிபுர, அவ்லேகம, குருணாகலை, இந்துல்கொடகந்த, நாரம்மல, பொல்கஹவெல, மொரகொல்லாகம, அலவ்வ, பண்டாரகொஸ்வத்த, பதுளை, ஹங்குராகெத்த, பயாகல, பேருவளை மற்றும் கிரிமெட்டியாவ ஆகிய பிரதேசங்கைளச் சேர்ந்த 25 ஆண்களும் , 23 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
இதேவேளை மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 2 இலட்சத்தைக் கடந்துள்ளது.
இந்நிலையில் இன்று சனிக்கிழமை நாட்டில் 3,094 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இதுவரையில் நாட்டில் 2 இலட்சத்து 2,357 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒரு இலட்சத்து 5,026 தொற்றாளர்கள் புத்தாண்டு கொத்தணியில் இனங்காணப்பட்டவர்களாவர் என்று கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இன்று சனிக்கிழமை காலை வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை பராமறிப்பு நிலையங்களிலிருந்து 1851 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர். அதற்கமைய இதுவரையில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் ஒரு இலட்சத்து 66,132 பேர் தொற்றிலிருந்து முற்றாக குணமடைந்துள்ளதோடு , 31,466 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் ஹோட்டல்கள் மற்றும் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் 55 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 4,587 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
Tags:
sri lanka news