எரிபொருள் விலையேற்ற விவகாரம்; ஆளும் கூட்டணிக்குள் மோதல் வெடித்தது..!!!
ஆளுங்கூட்டணிக் கட்சிக்குள் ஏற்பட்டுவந்த மறைமுக மோதல் போக்கு எரிபொருள் விலையேற்றத்தினை அடுத்து பகிரங்கத்துக்கு வந்துள்ளது.
பொது மக்கள் அசௌகரியத்துக்கு முகம்கொடுத்துள்ள காலப்பகுதியில் எரிபொருட்களின் விலையை அதிகரித்தமைக்கான பொறுப்பை ஏற்று விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பதவி விலக வேண்டும் என பொதுஜன முன்னணி கோரிக்கைவிடுத்துள்ளது.
அந்த கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆட்சியை கைப்பற்றி நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச்செல்லும் இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் எமது கட்சி மற்றும் அதன் தலைவரை அபகீர்த்திக்கு உள்ளாக்கியமை தொடர்பில் பொதுஜன கண்டனம் வெளியிட்டுள்ளது.
எனவே, விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் நேரடியாக பொறுப்பு கூறவேண்டும் எனவும் இவ்வாறானதொரு நிலைமையை ஏற்படுத்தியமை தொடர்பில் முழுமையான பொறுப்பை ஏற்றுக்கொண்டு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் தனது பதவியிலிருந்து விலக வேண்டும் எனவும் பொதுஜன முன்னணி கோரிக்கைவிடுத்துள்ளது.