Saturday 9 October 2021

நல்லூர் கோவில் அறங்காவலர் குகஶ்ரீ குமாரதாஸ் மாப்பாண முதலியார் குகபதமடைந்தார்..!!!

SHARE


நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது அறங்காவலர் குகஶ்ரீ குமாரதாஸ் மாப்பாண முதலியார் இன்று(09.10.2021) காலை குகபதமடைந்தார்.

1964 டிசம்பர் 15 முதல் இன்று வரை நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது அறங்காவலராக பணியாற்றிக்கொண்டிருப்பவர் இரகுநாத குமாரதாஸ் மாப்பாணமுதலியார் அவர்களாகும்.

1929ம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி பிறந்தார்.

ஏற்கனவே ஆலய வழிநடத்தல் திறனில் தந்தை இரகுநாத மாப்பாண முதலியார் பின்னர் தமையன் சண்முகதாஸ மாப்பாண முதலியாருடன் பணியாற்றிய அனுபவம் இருந்தமையாலும் இயல்பாகவே முருகப்பெருமான் மீது தீராத பக்திப்பெருக்கை கொண்டிருந்தமையாலும் இவரது பணிக்காலம் ஆலய வளர்ச்சியில் மிகப்பெரும் தனித்துவமிக்கதாய் நகர்ந்து வந்தது.

அதுமட்டுமல்லாது எப்போதும் ஆலயத்திலேயே இருந்து முருகனுக்கு நெருக்கமான பணியாற்றியதுடன் முருகனின் அன்புக்குப்பாத்திரமானவரான கடந்த 50 வருடங்களாக சேவையாற்றிவருகின்றார்.

மிக எளிமையாய் எவ்வித ஆடம்பரங்களும் அற்ற இவரது நிர்வாகத்திறனும் கோயிலுக்கான ஒரு சதத்தையேனும் இறைதிருப்பணிக்காக்கும் நேர்த்தியிலும் தூய்மைப்பகதியினாலும் இவரது பணிச்சிறப்பு எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது என்றால் மிகையில்லை.

கோயில் வளர்ச்சிக்கு ஏற்பவே பக்தர் கூட்டமும் பெருமளவில் திரள திரள ஆலய வளாகமும் இவர்காலத்தில் விஸ்தரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆலயத்தையும் இன்னும் இன்னும் மெருகேற்றி அழகுபடுத்தியதிலும் சரி நல்லூர் ஆலயம் அலங்காரக்கந்தன் என புகழப்படுமளவிற்கு முருகப்பெருமானின் அலங்காரத்தில் தனித்துவ மரபை கொண்டு வந்து அதனை தானே நேரடியாக அமைத்துவருபவர் குமாரதாஸ் மாப்பாணமுதலியார் ஆவார்.

இதுமட்டுமன்றி ஒவ்வொரு மகோற்சவத்திற்கு முன்பும் ஏதாவது திருப்பணியை நிறைவேற்றுவது என்னும் மரபும் நடைமுறைக்கு வந்தது இவருடைய காலத்திலேயே அந்த வகையில்

இவரது காலத்தில் ஆலயத்தில் இடம்பெற்ற பெரும் திருப்பணிகள் சில

*ஷண்முகருக்கான அழகிய சிறிய கோபுரப்பணியும் நிறைவு கண்டு 1966 குடமுழுக்கு நிகழ்த்தப்பட்டது,
*ஆலய மூலஸ்தானத்தை விடுத்து மற்ற அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி அழகுறஅமைத்து இன்றைய பெருங்கோயிலாக வளர்சியடைய இவரது பணிகள் உதவின,
*மகாமண்டபம், ருத்திர மண்டபம் என்பன அழகுபடுத்தப்பட்டன,
*முத்துககுமார சுவாமிக்கும் விமானத்துடன் கூடிய சந்நிதி அமைக்கப்பட்டது,
*தேர் முட்டி அமைக்கப்பட்டது.
*இலங்கை கோவில்களுக்கே அடையாளமாகவும் இன்றைய நல்லூரின் சின்னமான திகழும் கோபுரத்திற்கு வெளியேயான யாழ்ப்பாண கலாச்சாரத்துடன் பின்னிபிணைந்த சொக்கட்டான் பந்தல் வடிவான வில்லுமண்டபத்தை அமைத்து யாழ்ப்பாணத்திற்கே தனித்துவ வரலாற்றை வித்திட்டவர். இதுவே மாப்பாணர்பாணி கலையம்சத்தின் எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது…
*தொடர்ந்து வந்த ஆண்டுகளில் படிகளுடனான தேர் மண்டப அமைப்பும் அமைக்கப்ட்டது.
*1978ல் வசந்தமண்டபம் இன்னும் பெரிதாக அழகுற அமைக்கப்பட்டது.
*2012ல் சண்முக நவதள ராஜகோபுரமும்,
*2015ல் குபேர நவதள ராஜகோபுரமும் அமைக்கப்பட்டது.
*2017ல் சண்முக தீர்த்த கேணி புனர்த்தானம் செய்யப்பட்டது.
*2018ம் ஆண்டு ஷண்முகருக்கான தனித்த பொன்னால் ஆன சுவர்ண சபை விமானம் அமைக்கப்பட்டது,

குமாரதாஸ் மாப்பாணருடன் அவரது புதல்வாரன இளவலும் சேர்ந்து தற்போது ஆலயப்பணிகளை மிக நேர்த்தியுடன் முன்னெடுத்து வருகின்றனர்.

ஆலயதிருப்பணிகள் எங்குமில்லாதவாறு தனித்துவமாய் நடைபெறுவதே நல்லூர்வழக்கமாகும்.

முருகனின் உத்தரவுபடி ஒருவரது முடிவிலேயே ஆலயம் இயங்குவதும் இவ்வாலயத்தின் வெற்றிக்கு மிகப்பெரும் காரணமாகும்.


ஏழை, பணக்காரன் பேதமின்றி முருகனுக்காய் வழங்கும் பொருட்கள் அனைத்தும் முருகனது சொத்துடமையாக்கப்பட்டு ஆலயவளாகத்தில் வைத்தே அதிகாரிகளின் நேரடிப்பார்வையுடன் அனைவரும் காணும்வண்ணம் வெளிப்படைத்தனமையுடனேயே அனைத்து பணிகளும் இடம்பெறும்.

அதனைவிட கட்டப்பணிகளாயினும் சரி வாகன பணிகளாயினும் சரி நல்லூரானுக்கான ஆபரணங்கள் இப்படி எதுவாயினும் உருவாக்குதற்கு அப்பால் அவற்றை மிகத்திறம்பட பராமரிப்பதிலும் அனைத்துப் பொருட்களையும் காலாதி காலமாக பாவனைக்கு ஏற்ற வகையில் பேணிப்பாதுகாப்பதிலும் கூட நல்லைமுருகன் முன்னோடியாகவே இருக்கின்றார்.


ஆலய கட்டுமானங்களைப்பொறுத்தவரையில் ராஜகோபுரத்துடனான இருமணிக்கூட்டு கோபுரமாயினும் சரி, கோபுரத்திற்கு முன்னால் கம்பீரமாக அமைக்கப்பட்ட திருவாசிவடிவிலான வில்லுமண்டபமாயினும் சரி ஏற்கனவே இருந்த திராவிட கட்டடகலை மரபையும் தாண்டி ஏனைய பலதனித்துவ மரபுகள் போன்று மாப்பாணர் கட்டடப்பாணி என உலகவரலாற்றில் தனித்துவம் மிக்கதான பெருமையையும் நல்லூர் தன்னகத்தே கொண்டுள்ளது. பின்னாட்களில் ஈழத்தின் பல ஆலயங்கள் இப்பாணியை பின்பற்றி எழுந்தவையாகும்.

இவைமட்டுமல்லாது ஆலயத்தின் நிர்வாகி சிவாச்சாரியர்கள் அந்தணப்பெருமக்கள் முதல் பணியாளர்கள், தொண்டர்கள், பக்தர்கள் வரை அனைவருக்கும் உரிய கடப்பாடுகள் ஒழுங்குகள் விதிக்கப்பட்டு முருகனையே பிரதானமாக்கி அவருக்கான வழிபாடுகளையே முதன்மைப்படுத்தி அந்த பக்திப்பிரவாகம் எவ்வித வேறுபாடுகளும் இன்றி அனைவரையும் சென்றுசேர்வதை நல்லூரான் கோட்டம் எப்போதும் உறுதிப்படுத்தியே வந்துள்ளது.

ஆரம்பகாலங்களில் இருந்த முக்கிய பிரமுகர்களுக்கான செங்கம்பள வரவேற்புகள் கூட பிற்காலங்களில் நிறுத்தப்பட்டது ஒருமுறை அப்போதைய ஜனாதிபதியான டட்லிசேனநாயக்கா மற்றும் ஜீ.ஜீ. பொன்னம்பலம் வருகையின்போதே இவையாவும் நிறுத்தப்பட்டு ஆலயவளாகத்தில் அதுவும் முருகன் சந்நிதானத்தில் அனைவரும் சமம் எனும் புரட்சிகர நடைமுறை பேணப்பட்டு அது இன்றுவரை அப்பழுக்கற்று குமாரதாஸ மாப்பாண முதலியாரால் நிறைவேற்றப்பட்டுவருகின்றது.

அன்பு, பக்தியுடன் ஆலயத்திற்கு வருபவர்களுக்கு பணமோ அல்லது வேறுவிதமான சூழல்களோ இறை வழிபாட்டுக்கு தடையாக இருக்கக்கூடாது என்பதில் ஆலய நிர்வாகியான குமாரதாஸ் மாப்பாணமுதலியார் மிகத்தெளிவாக இருக்கிறார்.

உலகில் எந்த ஆலயத்திலும் இல்லாத தனித்துவ நடைமுறைகள் நல்லூரில் இருப்பது பெருமை தரும் விடயமாகும்.

ஒரு ரூபாய்க்கு அர்ச்சனைச்சீட்டு முதல் குறைந்த கட்டணத்திலேயே உருத்திரா அபிஷேகம் மற்றும் ஷண்முக அர்ச்சனைகள் என்பன உட்பட அனைத்து உபயங்களும் இன்றளவும் ஏசமான் ஐயாவினுடைய தலைமைத்தவத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.


ஆலயத்தை நன்கு அவதானிப்பவர்களுக்கு நல்லூரில் இடம்பெறும் வளர்ச்சியான மாற்றங்கள் அனைத்தும் ஆலய பக்திப்பாரம்பரியத்தை இன்னும் அதிகரிக்கவே அன்றி வேறில்லை என்பது புரியும்.

மற்றும் இவருடைய காலத்தில்

ஆரம்பத்தில் கேணிக்கு இடையில் இருந்த பொதுப்போக்குவரத்து வீதி அன்றைய இலங்கை அதிபர் ஜெயவர்ததனாவிடம் அனுமதிவேண்டி ஆலயத்துடன் இணைக்கப்பட்டு ஆலய வளாகம் விஸ்தரிக்கப்பட்டு வெளிவீதியே போக்குவரத்துக்குரியதாக மாற்றப்பட்டது.

ஆலய வளாகத்தில் இருந்த வணிக இடங்கள் எல்லாம் 1980 களில் அகற்றப்பட்டு அவற்றுக்கான தனியிடம் வெளிப்பகுதியில் ஒதுக்கப்பட்டது.
வீதிமுழுதும் வெள்ளை மணல் பரப்பப்பட்டு ஆலயவளாகம் விஸ்தாரமாகவும் தூய்மையாகவும் பேணப்படுகின்றது.

உண்மையில் நல்லூரான் ஆலயம் ஒரு மடாலயமாக இருந்தாலும் காலப்போக்கில் சிவாகம மரபுகளையும், குமாரதந்திர மரபுகளையும்
தேவைக்கு ஏற்ப அளவில் தன்னுள் கொண்டு ஆறுகால பூஜை நியமங்களையும் 25நாள் மஹோற்சவ பண்பியலையும் கொண்டுள்ளமை சிறப்பானதாகும்.

இத்தனை பெரும் வளர்ச்சிக்கு வித்திட்டவர் ஆலயத்தின் இன்றைய அதிகாரி குமாரதாஸ மாப்பாண முதலியார் என்றால் நிகரில்லை....


SHARE