அனைத்துலக அரங்கில் இலங்கை புறக்கணிப்பு..!!!


அமெரிக்காவில் நடைபெறும் ஜனநாயகத்திற்கான உச்சி மாநாட்டுக்கு இலங்கை அழைக்கப்படாமை குறித்து நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்த விடயத்தை இன்று நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தார். இதுகுறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான எமது நிரந்தர வதிவிடப் பிரதிநிதி, சர்வதேச சட்ட ஆணைக்குழுவின் ஆசனத்தை வெற்றிகொள்ளத் தவறியிருந்தார்.

தகுதியுள்ள 34 உறுப்பினர்கள் இந்த ஆணைக்குழுவிற்கு தெரிவுசெய்யப்பட்டனர். இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட எமது பிரதிநிதியால் அந்த ஆசனத்தை வெற்றிகொள்ள முடியவில்லை. இதனை பாரதூரமான ஒன்றாக நாம் கருத வேண்டும்.

முன்னாள் சட்டமா அதிபரான அவர், தற்போது ஐ.நா நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகவும் இருக்கின்றார். அதனை விட பிரதம நீதியசராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.

நாட்டின் பிரதம நீதியசர் மற்றும் சட்டமா அதிபர் சட்ட ஆணைக்குழுவிற்கு தேவையான தகுதியை கொண்டிருக்கவில்லை என சர்வதேச ரீதியான பார்வை இருக்குமாயின், அதனைப் பாரதூரமான ஒன்றாக கருத வேண்டும்.

வெளிவிவகார அமைச்சர் சட்ட அறிஞராக இருக்கின்ற போதிலும் ஐ.நா நிரந்தர வதிவிடப் பிரதிநிதியால் முக்கியமான சட்ட ஆணைக்குழுவின் உறுப்பினராக தெரிவாக முடியாமல் போயுள்ளது. குறிப்பிட்ட நபர் மோசமான பதிவுகளை சர்வதேச மட்டத்தில் கொண்டுள்ளார். குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அவரின் கருத்துக்கள் தொடர்பில் அதிருப்தி காணப்படுகின்றது.

பிரகீத் எக்னலிகொட தொடர்பில் சர்வதேச அரங்கில் கருத்து வெளியிட்ட போது, அவர் உயிருடன் இருப்பதாகவும் வெளிநாடு ஒன்றில் மறைந்து வாழ்வதாகவும் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கூறியிருந்தார். அவ்வாறாயின் எந்த நாட்டில் பிரகீத் எக்னலிகொட வசிக்கின்றார். அந்த நாட்டை கூறுமாறு கேட்ட போது, கடவுளுக்கு தான் அது தெரியும் என கூறியிருந்தார்.

இவ்வாறான செயற்பாடுகள், நாட்டின் கௌரவம், எமது நீதித்துறை மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பது தொடர்பில் சிறந்த விம்பம் ஏற்படுத்த ஒருபோதும் உதவாது. இதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

2020 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் தொடர்பான அறிக்கையில் விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

ஜனநாயகம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக கூறியுள்ளது. அமெரிக்காவும் முக்கிய ஜனநாயகம் தொடர்பான மாநாட்டிற்கு இலங்கையை அழைக்காமல் நிராகரித்துள்ளது.

ஏன் இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதும் கேள்விக்குரிய விடயமாக காணப்படுகின்றது. சர்வதேச ரீதியில் இலங்கையின் மதிப்பு சேதமடைந்துள்ளதையே இந்த சமிஞ்ஞைகள் காட்டுகின்றன” என அவர் கூறியுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here