சீரற்ற காலநிலை - உறவினரை மீட்க சென்ற நபர் மாயம்

 


சீரற்ற காலநிலை காரணமாக முந்தல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொத்தாந்தீவு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (08) மாலை காணாமல் போயுள்ளார்.


இது தொடர்பில் முந்தல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சில தினங்களாக தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வந்த நிலையில், தப்போவ நீர்த்தேக்கத்தின் 20 வான் கதவுகள் நேற்று (08) திறக்கப்பட்டன.

இவ்வாறு நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டமையால், புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியதுடன், கடும் வேகத்துடன் வெள்ளநீர் ஓடியது.

இந்நிலையில், கொத்தாந்தீவு பகுதியிலுள்ள இறால் பண்ணை ஒன்றில் வேலைக்கு சென்று வெள்ள நீருக்குள் சிக்கிக் கொண்ட உறவினர் ஒருவரை அழைத்துச் செல்வதற்காக வீட்டிலிருந்து சென்ற குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காணாமல் போன குடும்பஸ்தரை பொலிஸாருடன் இணைந்து மீனவர்களும், பொதுமக்களும் இணைந்து படகுகளின் உதவியுடன் தேடி வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here