முந்தல் புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள குளம் ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி நேற்று (07) உயிரிழந்ததாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
முந்தல் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று (07) மாலை மீன்பிடிப்பதற்காக முந்தல் குடியிருப்பு பகுதியிலுள்ள குளம் ஒன்றுக்கு சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு மீன்பிடிப்பதற்காக சென்ற நிலையிலேயே குறித்த நபர் அந்தக் குளத்தில் நீரில் மூழ்கியுள்ளார் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் ஒன்று சேர்ந்து குளத்திற்குள் வீழ்ந்த குடும்பஸ்தரை பாதுகாப்பாக வெளியே எடுத்து, உடனடியாக முந்தல் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news