Friday 26 November 2021

பருத்தித்துறை நீதிமன்றில் சிவாஜிக்கு எதிராக இன்று தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு..!!!

SHARE

முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தொடர்பில் பொலிஸார் தாக்கல் செய்துள்ள ஆவணங்களின் உண்மை நிலை தொடர்பில் புலன் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கையிடுமாறு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற எல்லையில் நவம்பர் 21 தொடக்கம் 28ஆம் திகதிவரை நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுக்க பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பங்களை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் வல்வெட்டித்துறை தீருவில் திடலில் நாளை மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெறும் திட்டமிடல் உள்ளதனால் அதற்கு தடை உத்தரவு வழங்குமாறு வல்வெட்டித்துறை பொலிஸார் இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் புதிய விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்தனர்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டார்.

பிரதிவாதி சார்பில் மூத்த சட்டத்தரணி ஒருவர் முன்னிலையானார்.

இருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த நீதிவான், பொலிஸாரின் விண்ணப்பத்தில் கோரப்பட்ட தடை உத்தரவு கோரிக்கையை நிராகரித்து கட்டளையிட்டார்.

பொலிஸாரினால் பாரதூரமான குற்றச்செயல் இடம்பெறலாம் என தாக்கல் செய்யப்பட்ட சிவாஜிலிங்கம் தொடர்பான மூன்று ஆவணங்களையும் புலன் விசாரணை செய்து வரும் டிசெம்பர் 10ஆம் திகதி மன்றுக்கு அறிக்கையிடுமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்
SHARE