டேங்கர் லொறி வெடித்து சிதறியதில் 54 பேர் உடல் கருகி பலி

 


கரீபியன் தீவுகள் பகுதியை சேர்ந்த ஹெய்தியில் பெட்ரோல், சமையல் எரிவாயு உட்பட எரிபொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் அந்நாட்டின் வடக்கு பகுதி நகரமான கேப்-ஹைட்டியனில் பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லொறி ஒன்று விபத்தை சந்தித்தது.


அப்போது அந்த லொறியில் இருந்த வெளியேறிய பெட்ரோலை கண்ட அருகில் இருந்த பகுதி மக்கள் பாத்திரங்களில் அதை அள்ளிச் சென்றுள்ளனர். எதிர்பாராதவிதமாக அப்போது தீப்பிடித்ததால், டேங்கர் லொறி வெடித்து சிதறியது. இதில் 54 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். விபத்து நடைபெற்ற பகுதியில் உள்ள சாலையில் பொதுமக்களின் சடலங்கள் சிதறிக் கிடந்தன. மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விபத்து தேசிய பேரழிவு என்று பிரதமர் ஏரியல் ஹென்றி தெரிவித்துள்ளார். விபத்து நடைபெற்ற பகுதியில் தற்காலிக மருத்துவமனைகளை அமைக்கப்பட்டு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடு தழுவிய அளவில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் பிரதமர் ஏரியல் ஹென்றி குறிப்பிட்டுள்ளார்.

விபத்தில் சிக்கிய டேங்கர் லொறியில் இருந்து பெட்ரோலை அள்ளிச் சென்றவர்களின் 20 வீடுகளும் தீப்பிடித்து எரிந்தன. அந்த வீடுகளில் இருந்தவர்களும் தீயில் கருகி இறந்தனர். எனவே இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று கேப் ஹெய்டன்நகர துணை மேயர் பேட்ரிக் அல்மோனார் தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here