Tuesday 4 January 2022

2022 புத்தாண்டு பலன்கள் – மிதுனம்..!!!

SHARE

கடமையே கண்கண்ட தெய்வம் என்று இருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த 2022ஆம் ஆண்டு நீங்கள் கடந்து வந்த கடினமான பாதையை எளிதாக்கி கொடுக்கும். இதுவரை பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வந்த உங்களுக்கு ஆறுதல் கிடைக்க கூடிய இனிய ஆண்டாக இவ்வாண்டு அமைய இருக்கிறது. பொருளாதார ரீதியான அதிர்ஷ்டம் உங்களுக்கு அதிகம் உண்டு. இந்த வகையில் 2022ஆம் ஆண்டில் இன்னும் என்னென்ன பலன்கள் கிடைக்கப் போகின்றது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

குடும்பம்:
குடும்பத்தைப் பொறுத்தவரை மிதுன ராசிக்காரர்களுக்கு அற்புத பலன்களை கொடுக்கும் ஆண்டாக அமைகிறது. என்னடா இது வாழ்க்கை? என்று நினைத்துக் கொண்டிருந்த உங்களுக்கு அதிலிருந்து புதிய மாற்றம் காண கூடிய யோகம் உண்டு. வாழ்க்கை என்றால் இன்ப, துன்பம் கலந்தது தான் என்பதை உணர்ந்து கொண்டு செயல்படுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான நிகழ்ச்சிகள் நிறைய நடைபெற இருக்கிறது. தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும் யோகமுண்டு. பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் உறுதுணையாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு விடாமுயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் விரும்பிய பயனை அடையலாம்.

பொருளாதாரம்:
பொருளாதார ரீதியாக மிதுன ராசிகாரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டு. நீங்கள் வருமா? வராதா? என்று நினைத்துக் கொண்டிருக்கும் பணம் கூட தானாகவே உங்கள் கைக்கு வந்து சேரும் யோகம் உண்டு. தொழில் ரீதியான புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தை, தொழிலை விரிவுபடுத்தும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு சாதகப் பலன்கள் உண்டு. அக்டோபர், நவம்பர் மாதங்களில் எதிர்பாராத திருப்பம் உண்டாகும்.

தொழில்:
வியாபாரம், தொழில், உத்தியோகம் போன்றவற்றில் இருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு சராசரியான சூழ்நிலை நிலவும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்கள் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து அதற்கான முயற்சிகளை ஆரம்பிக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் திறமையை கூடுதலாக கொடுப்பது ஏற்றத்தைக் கொடுக்கும். கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு ஆண்டின் இரண்டாம் பாதி தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால் கவனம் தேவை. முன்பின் தெரியாதவர்களின் அறிமுகத்தை கூடுமானவரை சந்தேகிப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

ஆரோக்கியம்:
ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மிதுன ராசிக்காரர்களுக்கு ஆண்டின் துவக்கத்தில் சாதகமற்ற பலன்களை கொடுக்கும். சனி பகவான் ஆரோக்கிய ரீதியான பாதிப்புகளை அவ்வபோது ஏற்படுத்துவார். 6-ஆம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் உணவு பழக்கத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எண்ணெய் பதார்த்தங்களை குறைத்துக் கொள்வது உத்தமம். தூக்கமின்மை, அஜீரணம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்பட நேரிடும் என்பதால் உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது நல்லது.

காதல்:
காதல் விவகாரத்தில் மேலும் அதிர்ஷ்ட பலன்களை பெற இருக்கிறீர்கள். கணவன், மனைவிக்கு இடையே உணர்ச்சிப் பெருக்கான சம்பவங்கள் நடைபெறும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். போட்டியும், பொறாமையும் கொண்டிருந்த கணவன் மனைவிக்கு இடையே அவை நீங்கி பரஸ்பர ஒற்றுமை நீடிக்கும். குடும்ப ஒற்றுமைக்கு அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வாருங்கள். திருமணமாகாதவர்களுக்கு கூடிய விரைவில் உங்கள் துணையை சந்திக்கும் அற்புத வாய்ப்புகள் ஆண்டின் துவக்கத்திலேயே அமையும்.

பரிகாரம்:
ஆண்டின் துவக்கத்தில் சனி பகவான் தொழில் மற்றும் ஆரோக்கிய ரீதியாக சில பாதிப்புகளை ஏற்படுத்துவார் என்பதால் சனிக்கிழமை தோறும் சனி வழிபாடு செய்து வாருங்கள். காக்கைக்கு எள் சோறு வையுங்கள். ஏப்ரல் மாதத்திற்கு பிறகு ஓரளவுக்கு நல்ல பலன்களை பெற இருக்கிறீர்கள் எனவே தடைகள் ஏற்படாமலிருக்க செவ்வாய் கிழமையில் ஆறுமுகனுக்கு விளக்கேற்றி வழிபட்டு வாருங்கள். விரும்பியதைப் பெற விதவைப் பெண்களுக்கு மறுமணம் செய்து கொடுப்பதில் உதவி புரியுங்கள்.
SHARE