Saturday 1 January 2022

வான வேடிக்கைகளுக்கு மத்தியில் பறிபோன ஐவரின் உயிர்..!!!

SHARE



நாட்டின் பல பகுதிகளில் நேற்று (31) இடம்பெற்ற வீதி விபத்துக்களில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

சிலாபம், கரடியனாறு, பேராதனை, கடுகன்னாவ மற்றும் பியகம ஆகிய இடங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு – சிலாபம் பிரதான வீதியின் மெரவல பகுதியில் சிலாபம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் பலத்த காயமடைந்த சைக்கிளில் சென்ற நபர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மெரவல பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடையவ ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு - செங்கலடி வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கரடியனாறு பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை பேராதனை - கட்டுகஸ்தோட்டை வீதியில் கோரக்கதெனிய சந்திக்கு அருகில் பேராதனையிலிருந்து கட்டுகஸ்தோட்டை நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கடுகன்னாவை பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய யுவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த லொறி ஒன்று கண்டி ஊராபொல பிரதேசத்தில் பாதசாரி ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த 60 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியின் சாரதியின் கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பியகம - பண்டாரவத்தை மல்வான வீதியில் யபரலுவ பிரதேசத்தில் பண்டாரவத்தை நோக்கிச் சென்ற சிறிய லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அனுராதபுரத்தைச் சேர்ந்த 21 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்
SHARE