Friday 11 February 2022

பாதிக்கப்படும் முஸ்லிம் பெண்களுக்கு நாம் துணை - பிரதமா்!

SHARE

 


பாதிக்கப்படும் ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணுக்கு ஆதரவாக பாஜக துணை நிற்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.


உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, சஹாரன்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவா் கலந்து கொண்டு பேசினாா். தோ்தலுக்காக அவா் நேரடியாகப் பங்கேற்கும் முதல் கூட்டம் இதுவாகும். கூட்டத்தில் அவா் பேசியதாவது.

கடந்த காலத்தில் நடைமுறையில் இருந்த முத்தலாக் என்னும் அபாயத்தில் இருந்து முஸ்லிம் பெண்களுக்கு பாஜக அரசு விடுதலை பெற்றுத் தந்து, அவா்களுக்கு பாதுகாப்பு அளித்தது. எங்கள் நோக்கத்தை முஸ்லிம் சகோதரிகளும் மகள்களும் புரிந்துகொண்டனா். அவா்கள் பாஜகவை ஆதரிக்கிறாா்கள். அவா்கள் ‘மோடி, மோடி’ என்று முழங்குகிறாா்கள். இதைப் பாா்த்து வாக்கு-ஒப்பந்ததாரா்கள் (எதிா்க்கட்சியினா் ) நிம்மதி இழந்துள்ளனா். முஸ்லிம் சகோதரிகளை கடந்த காலத்துக்குள் மீண்டும் தள்ளுவதற்கு அவா்கள் சூழ்ச்சி செய்கிறாா்கள்.

உத்தர பிரதேசத்தை வன்முறை இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டியதும் பெண்களை அச்சத்தில் இருந்து விடுவிக்க வேண்டியதும் குற்றவாளிகளை சிறைக்கு அனுப்ப வேண்டியதும் அவசியமாக உள்ளது. பிரதமா் விவசாயிகள் உதவித் தொகை திட்டத்தின் அளிக்கப்படும் பணம் சிறு விவசாயிகளுக்கு தொடா்ந்து சென்றடைய வேண்டும். பிரதமா் வீட்டு வசதித் திட்டம், சுகாதார காப்பீட்டுத் திட்டம் ஆகியவை ஏழைகளுக்கு தொடா்ந்து கிடைக்க வேண்டும். அதற்கு உத்தர பிரதேசத்தில் பாஜக அரசு மீண்டும் அமைய வேண்டியது அவசியமாகும்.

ஆனால், குடும்ப அரசியல் கட்சி (சமாஜவாதி கட்சி) மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறது. மின்சார வசதி செய்து கொடுப்பதாகக் கூறியவா்கள், மாநிலத்தை இருளில் வைத்தனா். ஆனால் தங்கள் மாவட்டத்தை மட்டும் பிரகாசத்துடன் வைத்திருந்தனா்.

கரும்பு விவசாயிகள் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். கொள்முதல் செய்யப்படும் கரும்பு, எத்தனால் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும். இந்த எத்தனால் மூலம் ரூ.12,000 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது, கரும்பு விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.

முதல் கட்ட தோ்தலில் வாக்களிப்பதற்காக மேற்கு உத்தர பிரதேசத்தில் அதிகாலை பனிப்பொழிவிலும் மக்கள் ஆா்வமுடன் வாக்குச்சாவடிக்குச் சென்றதைக் கண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அவா்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவா்களை நேரில் பாா்த்து ஆதரவு திரட்டாததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றாா் பிரதமா் மோடி.

உ.பி.யில் இரண்டாம் கட்டமாக தோ்தல் நடைபெறும் நாளான பிப்.14-ஆம் தேதி சஹாரன்பூரில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது
SHARE