வைத்தியசாலை கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு..!!!



 மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த ஆண் ஒருவர் வைத்தியசாலை விடுதி மலசல கூட ஜன்னல் கம்பில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நேற்று (22) இரவு இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுணதீவு நாவற்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய சிவலிங்கம் தட்சணாமூர்த்தி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மனநோய் காரணமாக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவதினமான இன்று இரவு 7.45 மணிக்கு கடைசியாக விடுதியில் உள்ள நோயாளிகளை வைத்தியர் பார்வையிட்டு சென்ற பின்னர் மலசலம் கழிப்பதற்காக குறித்த நபரை அவருக்கு உதவியாக இருந்த அவரது உறவினர் அவரை மலசல கூடத்திற்கு கூட்டிச் சென்று விட்டுவிட்டு வெளியில் காத்திருந்துள்ளார்.

மலசல கூடத்துக்குள் சென்றவர் நீண்ட நேரம் வெளியில் வராததையடுத்து கதவை திறந்து போது மலசல கூட யன்னல் கம்பியில் உடுத்திருந்த சாரத்தை பயன்படுத்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here