முல்லைத்தீவில் மாணவிகள் துஸ்பிரயோகம் - ஆசிரியரும் 6 மாணவர்களும் கைது..!!!
முல்லைத்தீவில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவிகளை மிரட்டி , பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரையும் மாணவன் ஒருவனையும் முல்லைத்தீவு நீதவான் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்டுள்ளார்.
முல்லைத்தீவில் அபிவிருத்தி உத்தியோகஸ்தராக நியமிக்கப்பட்ட ஒருவர் அங்குள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கின்றார். அவர் தன்னிடம் கல்வி கற்கும் மாணவர்கள் சிலரை பயன்படுத்தி , திட்டமிட்டு சக மாணவிகளை காதலிக்க வைத்துள்ளார்.
ஆசிரியரின் வழிகாட்டலில் காதலித்த மாணவர்கள் தாம் காதலிப்பதாக நடித்த மாணவிகளுடன் நெருக்கமாக பழகி அவர்களுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் , அந்தரங்க புகைப்படங்கள் என்பவற்றை ஆசிரியருடன் பகிர்ந்து கொண்டு , பின்னர் அந்த மாணவிகளை மிரட்டி பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் முல்லைத்தீவு இளைஞர்கள் சிலர் அறிந்து , சம்பவத்துடன் தொடர்புடைய சில மாணவர்களை மடக்கி பிடித்து அவர்களின் கையடக்க தொலைபேசிகளை சோதனையிட்ட போது , அவற்றில் மாணவிகள் சிலரின் அந்தரங்க புகைப்படங்கள் , காணொளிகள் என்பன காணப்பட்டுள்ளன. அத்துடன் அந்த சம்பவங்களுடன் ஆசிரியருக்கும் தொடர்பு இருப்பது தொடர்பிலும் உறுதிப்படுத்திக்கொண்டனர்.
அதனை அடுத்து அது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு அறிவித்தனர். அதனடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து , பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலரை அடையாளம் கண்டு அவர்களின் வாக்கு மூலங்களை பதிவு செய்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவிகளின் வாக்கு மூலங்களின் அடிப்படையில் ஆறு மாணவர்களை பொலிஸார் கைது செய்தனர். ஆசிரியரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்த வேளை அவர் தலைமறைவாகி இருந்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட ஆறு மாணவர்களையும் நீதிமன்றில் முற்படுத்திய வேளை , தலைமறைவாக இருந்த ஆசிரியர் சட்டத்தரணி ஊடாக மன்றில் சரணடைந்தார்.
அதனை அடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது ஆசிரியர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி பிணை விண்ணப்பம் செய்தார்.
ஆசிரியருக்கு பிணை வழங்க பொலிஸார் கடும் ஆட்சேபணை தெரிவித்தனர். அத்துடன் ஆசிரியரிடம் தாம் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை எனவும் , சான்று பொருட்கள் சிலவற்றை பெற வேண்டிய நிலைமை உள்ளமையால் அவருக்கு பிணை வழங்கும் பட்சத்தில் , தமது விசாரணைக்கு இடையூறுகள் ஏற்படும் என பொலிஸார் மன்றில் தெரிவித்து பிணைக்கு ஆட்சேபனை தெரிவித்தனர்.
அதனை அடுத்து ஆசிரியரையும் மாணவன் ஒருவனையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் , ஏனைய 5 மாணவர்களுக்கு பிணை வழங்கி வழக்கை 30ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.