
நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்
எரிபொருள் பிரச்சினை மற்றும் அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் அலுவலகத்தில் இன்று (23) முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
கல்வி, மீன்பிடி, சுற்றுலா, விவசாயம் மற்றும் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளுக்கு வழக்கமான மற்றும் துரித எரிபொருள் விநியோகம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
பாடசாலை சேவையில் ஈடுபடும் பேருந்து மற்றும் சிற்றூர்ந்து ஆகிய வாகனங்களுக்கு இன்று பிற்பகல் 3 முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து இலங்கை போக்குவரத்து சபை டிப்போ ஊடாக எரிபொருள் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
நாளை மறுதினம் முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மீள ஆரம்பிக்கும்போது, மாணவர்களுக்கு அவசியமான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவது குறித்து கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளார்.
இதையடுத்து, போக்குவரத்து அமைச்சருக்கு ஜனாதிபதியினால் குறித்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Tags:
sri lanka news