வட மாகாணத்தில் விவசாயம் மற்றும் நீர்வேளாண்மை உற்பத்திகளை உடனடியாக ஆரம்பிக்க தீர்மானம்: டக்ளஸ் தேவானந்தா..!!!
அடர்ந்த காடுகளுக்கு பாதிப்பு ஏற்பாடாத வகையில், வனவளப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களினால் அடையாளப்படுத்தப்பட்ட காணிகளில் விவசாயம் மற்றும் நீர்வேளாண்மை உற்பத்திகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் தலைமையில் நேற்று (22.09.2022) நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் குறித்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த திணைக்களங்களினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகள் மற்றும் யுத்தத்திற்கு முன்னர் மக்கள் பயன்படுத்திய காணிகள் போன்றவை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு உரியவர்களிடம் கையளிக்கப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களங்களினால் வடக்கு மாகாணத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களுள், விவசாயம் மற்றும் நீர்வேளாண்மை எனப்படும் நீரியல் உயிரின வளர்ப்பு உற்பத்திகளை மேற்கொள்வதற்கு பொருத்தமான இடங்களை விடுவித்து, உற்பத்திகளை மேற்கொள்வதற்கு பிரதேச மக்களிடம் கையளிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்கான துறைசார் அமைச்சர்கள் உள்ளிட்ட உயர்மட்டக் கலந்துரையாடல், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கு அமைய, வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சில் நேற்று இடம்பெற்றது.அதேபோன்று, மன்னார் சுவாமித் தோட்டம் கிராமத்தில் கடந்த பல நூற்றாண்டுகளாக தேவாலயத்தினால் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், தேசிய பூங்கா அமைக்கும் திட்டத்திற்கு அமைய, அண்மையில் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தட்ட காணிகளை மீள அளிப்பதற்கும் குறித்த திணைக்களம் சம்மதித்துள்ளது.
அண்மையில் மன்னாருக்கான விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த சம்மந்தப்பட்ட தேவாலயத் தரப்பினர், மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்ட குறித்த காணிகளை மீட்டுத் தருமாறு கோரிக்கை முன்வைத்தனர்.