
தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்குத் தேர்தல் நடப்பது வழக்கம். கடந்த தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் பதவிக் காலம் தற்போது முடிவடைய இருப்பதால் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நேற்று தேர்தல் நடைபெற்றது.
தலைவர் பதவிக்கு இயக்குநர்கள் கே.பாக்யராஜூம், எஸ்.ஏ.சந்திரசேகரும் போட்டியிட்டனர். செயலாளர் பதவிக்கு இயக்குநர்கள் லியாகத் அலிகானும், மனோஜ் குமாரும் போட்டியிட்டனர்.
பொருளாளர் பதவிக்கு பாலசேகரனும், ரமேஷ் கண்ணாவும் போட்டியிட்டனர். இரண்டு துணைத் தலைவர்கள் பதவிக்கு ‘யார்’ கண்ணன், காரைக்குடி நாராயணன், ரவி மரியா, மனோபாலா ஆகியோர் போட்டியிட்டனர்.
நான்கு இணைச் செயலாளர்கள் பதவிக்கு மங்கை அரிராஜன், சின்னி ஜெயந்த், கவிஞர் முத்துலிங்கம், மதுரை தங்கம், வி.பிரபாகர், சி.ரங்கநாதன், எம்.ரத்னகுமார், பி.சாந்தகுமார், டி.கே.சண்முகசுந்தரம், என்.வேல்முருகன் ஆகிய 10 பேர் போட்டியிட்டனர்.
நேற்று காலை சென்னை வடபழனி, கமலா தியேட்டர் அருகில் இருக்கும் திரையிசை கலைஞர்கள் சங்கத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரையிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது.
40 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
மொத்தமுள்ள 485 வாக்குகளில் 346 வாக்குகள் பதிவாயின. வாக்குப் பதிவு முடிவடைந்தவுடன் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட கே.பாக்யராஜ் 192 வாக்குகள் பெற்று 40 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் 152 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
பொதுச் செயலாளர் பதவிக்கு கே.பாக்யராஜ் அணியில் போட்டியிட்ட இயக்குநர் லியாகத் அலிகான் 292 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இயக்குநர் மனோஜ் குமார் 151 வாக்குகள் பெற்றிருந்தார்.
2 துணைத் தலைவர்கள் பதவிக்குப் போட்டியிட்டவர்களில் கே.பாக்யராஜ் அணியில் போட்டியிட்ட இயக்குநர் யார் கண்ணன் 194 வாக்குகளையும், ரவி மரியா 162 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றனர்.
இவர்களுடன் போட்டியிட்ட காரைக்குடி நாராயணன் 155 வாக்குகளையும், மனோபாலா 146 வாக்குகளையும் பெற்றுத் தோல்வியடைந்தனர்.
நான்கு இணைச் செயலாளர்கள் பதவிக்கு கே.பாக்யராஜ் அணியில் போட்டியிட்ட மங்கை அரிராஜன் மற்றும் கவிஞர் முத்து லிங்கம் இருவரும் வெற்றி பெற்றனர். அதேபோல் எஸ்.ஏ.சந்திரசேகர் அணியில் போட்டியிட்ட சி.ரங்கநாதன், வி.பிரபாகர் இருவரும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.
12 செயற்குழு உறுப்பினர்களுக்கான போட்டியில்
இயக்குநர் பாலாஜி சக்திவேல்(215) – கே.பாக்யராஜ் அணி
பட்டுக்கோட்டை பிரபாகரன்(205) – கே.பாக்யராஜ் அணி
பேரரசு(200) – வசந்தம் அணி
சரண்(188) – வசந்தம் அணி
விவேகா(185) – வசந்தம் அணி
சிங்கம் புலி(180) – வசந்தம் அணி
சாய் ரமணி(173) – வசந்தம் அணி
ராஜா கார்த்திக்(169) – கே.பாக்யராஜ் அணி
ஏ வெங்கடேஷ்(160) – வசந்தம் அணி
ராதா ரவி(159) – வசந்தம் அணி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
மொத்தமாக இந்தத் தேர்தலில் போட்டியிட்டவர்களில் வசந்தம் அணியின் சார்பில் 10 எழுத்தாளர்களும், கே.பாக்யராஜ் அணியின் சார்பில் 11 பேரும் வெற்றி பெற்றனர்.
Tags:
cinema news