Monday 3 October 2022

கால்பந்து போட்டியில் தோல்வி!: ஆத்திரமடைந்த ரசிகர்களினால் ஏற்பட்ட வன்முறையில் 129பேர் உயிரிழப்பு..!!!

SHARE



இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் இடம்பெற்ற கலவரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 129 பேர் உயிரிழந்ததாகவும், 180 பேர் காயமடைந்ததாகவும் இந்தோனேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு ஜாவா மலாங் மாகாணத்தில் உள்ள கஞ்சுருஹான் பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் சனிக்கிழமை இரவு போட்டி ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் உள்ளூர் அணிகளான அரேமா மற்றும் பெர்செபயா சுரபயா அணிகள் களம் கண்டன.

இந்த போட்டியில் அரேமா அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.தோல்வியடைந்த அரேமா அணியின் சொந்த மைதானத்தில்தான் இந்த போட்டி நடைபெற்றது என்பதால், அந்த அணியின் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு திரண்டிருந்தனர்.ரசிகர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதனால் ரசிகர்கள் ஓட முயற்ச்சித்த வேளையில் கூட்ட நெரிசலில் சிக்கியும் மூச்சுத் திணறல் ஏற்பட்டும் பலர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கிழக்கு ஜாவா பொலிஸ் தலைமை அதிகாரி நிகோ அஃபின்டா இன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில், 129 பேர் உயிரிழந்ததாகவும் , அவர்களில் இருவர் பொலிஸ் அதிகாரிகள் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறந்தவர்களில் 34 பேர் மைதானத்திற்குள் இறந்துள்ளனர். ஏனையோர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கிழக்கு ஜாவாவின் மலாங் ரீஜென்சியில் நடந்த ஆட்டத்தில் பெர்செபயா சுரபயாவிடம் அரேமா 3-2 என்ற கணக்கில் தோல்வியடைந்ததை அடுத்து, இரண்டு ஜாவானீஸ் கிளப்புகளின் ரசிகர்களிடையே சண்டை ஏற்பட்டதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

இந்நிலையில்,சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது என்று இந்தோனேசியாவின் கால்பந்து சங்கம் (PSSI) தெரிவித்துள்ளது.

மேலும், இந்தோனேசிய விளையாட்டு மற்றும் இளைஞர் அமைச்சர் ஜைனுடின் அமலி, இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
SHARE