
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் திருடிய மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி பருத்தித்துறையில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை வழிப்பறிக் கொள்ளையிட்ட சம்பவம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (07) மாலை இடம்பெற்றுள்ளது.
வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான என்எஸ் பல்சர் ரக மோட்டார் சைக்கிள் நேற்று மாலை திருடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதே மோட்டார் சைக்கிளினை பயன்படுத்தி அதில் பயணித்த இருவர், நேற்று மாலை பருத்தித்துறை திக்கம் பகுதியில் வீதியால் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை அபகரித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அத்துடன் வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை ஆகிய இருவேறு இடங்களில் வழிப்பறிக் கொள்ளைக்கு முற்பட்ட போதும் அந்தப் பகுதியில் இருந்தவர்கள் சாதூரியமாகச் செயற்பட்டதால் கொள்ளையர்கள் தப்பித்துள்ளனர்.
இந்த திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை பொலிஸார் தனித்தனியே விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.