Sunday 26 February 2023

தோல் அழற்சி நோயிற்கான நிவாரணம்..!!!

SHARE

சரும நோய் என்றாலே தோல் அரிப்பு நோய், தோல் அரிக்காத படர் தாமரைப் போன்ற நோய் மற்றும் அரிக்கும் ஆனால் கண்ணுக்குப் புலப்படாத நோய் என பலவாறு பிரித்துக் கூறினாலும், பொதுவாக தோல் நோய்கள் வந்தாலே மனதளவில் தளர்ச்சி ஏற்பட்டுவிடும்.

இதற்காக சரும நோய்கள் ஏற்பட்டவுடன் உடனடியாக மருத்துவர்களைச் சந்தித்து ஆலோசனைப் பெறுவார்கள்.

அதிலும் ஆண்களை விடவும் பெண்கள் இவ்விடயத்தில் சற்று கூடுதல் கவனத்துடன் இருக்கிறார்கள்.

அரிக்கும் தோல் நோய்கள் பெரும்பாலும் ஒவ்வாமையின் பக்கவிளைவாகவேப் பார்க்கப்படுகிறது.

ஒரு சிலருக்கு அவர்கள் உட்கொள்ளும் மருந்தின் பக்க விளைவாகவும், வேறு சிலருக்கும் அவர்கள் சாப்பிடும் உணவின் வகைகளால் ஏற்படும் பின்விளைவாகவும், வேறு சிலருக்கு மட்டுமே இது மரபு வழி காரணிகளால் ஏற்படும் நோயாகவும் இருக்கிறது.

ஆஸ்துமா பாதித்துள்ள ஒரு குடும்ப உறுப்பினரின் பரம்பரையில் வருவோர்களுக்கு இது மரபு வழி பாதிப்பாக இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. அதிலும் தடிப்புடன் கூடிய அரிப்பு, தலை அரிப்பு தலைப் பகுதி அரிப்பு கழுத்து, கை, மூட்டுகளின் உள்பக்கம், கால், முழங்கால் மற்றும் பிட்டங்கள் ஆகிய பகுதிகளில் இவர்களுக்கு தோல் அரிப்பு நோய் தாக்குவது உறுதி என்று கண்டறியப்பட்டுள்ளன. இவர்கள் மிகுந்த கவனத்துடன் தொடக்க நிலையிலேயே மருத்துவர்களைச் சந்தித்து ஆலோசனைப் பெறவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

ஒரு சிலருக்கு வியர்வைக் கட்டி விரல் ஓரங்களில் கொப்புளம்,தொப்புள், உள்ளங்கை, உள்ளங்கால் போன்ற பகுதிகளில் தோலழற்சி நோய் பாதிக்கும். இது பெரும்பாலும் பெண்களையே அதிகமாகப் பாதிப்பதால் இவ்வகையான அரிப்புக்கு இல்லத்தரசி அரிப்பு நோய் என்றும் சில மருத்துவர்கள் குறிப்பிடுவதுண்டு. இது பொதுவாக கோடை மற்றும் வெப்பம் மிகுந்த காலங்களில் ஏற்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

ஒரு சிலருக்கு அவர்களின் குருதி ஓட்டம் இயல்பான அளவை விட மிகக்குறைந்த அளவேயிருந்தால் அவர்களுக்கு நரம்பிய அரிப்பு தோலழற்சி (Venous Eczema). புவியீர்ப்பு அரிப்பு தோலழற்சி ( Gravitational Eczwma) , மந்த சருமவழல் ( Statis Dermatitis), சிரைத் தளர்ச்சி அரிப்புத் தோலழற்சி (Vericose Eczema) ஆகிய சரும நோய்கள் வரக்கூடும்.அத்துடன் இத்தகைய பாதிப்புகள் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்குக் கணுக்கால் பகுதியில் ஏற்படுகிறது. இப்பகுதியில் தோல் சிவந்து காணப்படும். ஒரு சிலருக்கு கணுக்காலின் அளவு சுருங்கியோ அல்லது கருத்தோக் காணப்படும். இது காலில் புண் கள் வருவதற்கு முந்தைய நிலை என்று கூட கூறலாம். அதனால் இந்நிலையில் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவர்களை சந்தித்து சிகிச்சைப் பெற்று நிவாரணத்தைத் பெற்றுக்கொள்ளவேண்டும்.

பொதுவாக எம்முடைய சருமப் பாதுகாப்பு தடையானது பாதிக்கப்படும் போது (அதாவது தோல் வறண்டு போதல் அல்லது வெடிப்பு விடுதல்) எம்முடைய புறச்சூழலில் உள்ள நோயை உருவாக்கக்கூடிய பாக்டீரியக்கள் தோலின் வழியாக உடலில் உள் நுழைகின்றன. அத்துடன் நாம் மேலும் சரும பாதிப்பை உணராமல் சொறிவதால் அதனை மேலும் பல இடங்களுக்கு பரவ அனுமதிக்கிறோம். இதனை தடுக்கவேண்டும் என்றால் சரும பாதுகாப்புப் படைக்கு தேவையான நுண்ணுயிர் எதிர்ப்புப் பொருளை உணவாகவோ அல்லது மருந்தாகவோ எடுத் துக்கொள்ளவேண்டும்.

வறண்ட சருமம் உள்ளவர்கள் அல்லது தோல் அரிப்பால் சருமம் வறண்டு போன வர்கள் இருவர்களும் தோலை ஈரப்பதமாக வைத்திருக்கக்கூடிய சிகிச்சைகள் மீது கவனத்துடன் இருக்கவேண்டும். தோல், தேவையான நீர்ச்சத்துடன் இருந்தால் தான் தோல் பாதுகாப்பாக இருக்கும். அத்துடன் தோல் அரிப்பு மற்றும் தோலழற்சிக்கு இடம் கொடாமல் இருக்கும். இதற்கு நீங்கள் உங்களின் சவர்க்காரத்தை கவனமாகத் தெரிவு செய்யவேண்டும். ஏனெனில் தோல் அழற்சிக்கு சவர்க்காரம் முக்கிய காரணமாக இருக்கிறது. அத்துடன் முகப்பூச்சுகளையும், வாசனை திரவியங்களையும் தவிர்க்கவேண்டும். அதற்கு மாற்றாக கூழ்ம நிலையில் கிடைக்கும் ஓட்ஸ் உணவு வகைகளைப் பயன்படுத்தி குளிக்கலாம் அல்லது இயற்கையான சரும பாதுகாப்பு எண்ணெயை தேய்த்து குளித்து தோலை வறட்சியடையச் செய்யாமல் தேவையான அளவிற்கு ஈரப்பதத்துடன் வைத்துக்கொண்டால் தோல் அழற்சி நோய் தீண்டாது.


டாக்டர் எஸ். அனூஜ் சிங்
தொகுப்பு அனுஷா.
SHARE