வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காம ஆடி பெருவிழாவுக்கு யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி ஆலயத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்களுடன் பாத யாத்திரை சனிக்கிழமை (6) ஆரம்பமாகியுள்ளது.
பாத யாத்திரை குழுத் தலைவர் ஜெயா வேல்சாமி தலைமையில் இந்த யாத்திரை ஒருங்கமைக்கப்பட்டுள்ளது.
செல்வச் சந்நிதி ஆலயத்தில் இன்று காலை நடைபெற்ற விசேட பூசையினை தொடர்ந்து, மோகன் சுவாமியால் கதிர்காம பாத யாத்திரைக் குழுத் தலைவரிடம் வேலாயுதம் சம்பிரதாயபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கு, ஊவா ஆகிய 3 மாகாணங்களில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகல ஆகிய 7 மாவட்டங்களிலும் உள்ள 98 ஆலயங்களை தரிசித்து, 46 நாட்களில் 815 கிலோ மீற்றர் தூரத்தை கடந்து, கதிர்காம ஆலயத்துக்கு இந்த பாத யாத்திரை சென்றடையும்.
இலங்கையின் மிக நீண்ட தூர கதிர்காம பாத யாத்திரையாக இது கருதப்படுகிறது.