யாழ். உரும்பிராயில் குழு மோதல் - 3 இளைஞர்கள் காயம்..!!!


தீபாவளி தினமான நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் மூன்று இளைஞர்கள் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

யாழ்ப்பாணம் - பலாலி வீதியில் உரும்பிராய் சந்திக்கு அருகில் இடம்பெற்ற குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

உரும்பிராய் சந்திக்கு அருகில் இளைஞர் குழு ஒன்று வீதியில் நின்றுள்ளது. அதன் போது வீதியில் கன்ரர் ரக வாகனத்தில் சென்ற ஏழாலை பகுதியை சேர்ந்த இளைஞர்களுடன் முரண்பாடு ஏற்பட்டு , இரு குழுவினரும் வீதியில் மோதிக்கொண்டனர்

அதன் போது அவர்கள் பயணித்த கன்ரர் ரக வாகனமும் சோதமாக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து கன்ரரில் வந்தவர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பி தமது ஊருக்கு சென்று , மேலும் சில இளைஞர்களுடன் மூன்று கன்ரர் ரக வாகனத்தில் உரும்பிராய் சந்தி பகுதிக்கு வந்து தம்மை தாக்கியவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இரு இளைஞர் குழுக்களும் வீதியில் மோதிக்கொண்டமையால், வீதியின் ஊடான போக்குவரத்து ஒரு சில மணி நேரம் தடைப்பட்டு இருந்தது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்த போது , பொலிசாரை கண்டதும் மோதலில் ஈடுபட்ட நபர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.

அதேவேளை மோதலில் காயமடைந்த மூன்று இளைஞர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here