யாழில் கிராம சேவையாளருடன் முரண்பட்ட இருவரும் விளக்கமறியலில்..!!!


உணவு வழங்கவில்லை என கிராம சேவையாளருடன் முரண்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

வடமராட்சி, கற்கோவளம் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைத்திருந்த சில குடும்பங்களுக்கு உணவு வழங்க மறுத்தார் என கிராம சேவையாளருடன் முரண்பட்ட குற்றத்தில்  ஞாயிற்றுக்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , இருவரையும் நேற்றைய தினம் திங்கட்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் , வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here