நடிகர் சூர்யாவின் திரைத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அவரது ரெட்ரோ திரைப்படம் முதல்நாள் வசூல் சாதனை செய்துள்ளது.
கங்குவா படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் நேற்று (மே 1) வெளியான திரைப்படம் ரெட்ரோ.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ், சூர்யாவுடன் இணைந்ததால் இப்படத்தின் எதிர்பார்ப்பு கூடியது.
மேலும் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான ’கன்னிமா’ பாடலுக்கு பூஜா ஹெக்டேவின் அசத்தலான நடனமும் டிரெண்டிங் ஆக ரசிகர்கள் முதல் நாளில் படத்தைக் காண பெரும் ஆர்வம் காட்டி வந்தனர்.
இந்த நிலையில் உலகம் முழுவதும் நேற்று வெளியான ரெட்ரோ திரைப்படத்தின் முதல் காட்சி முதலே கலவையான விமர்சனங்கள் வந்தன.
இதனையடுத்து படத்தின் வசூல் நிலவரம் குறித்து பல்வேறு கருத்துகள் சமூகவலைதளங்களில் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில் ரெட்ரோ திரைப்படம் முதல்நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.17.75 கோடி வசூல் செய்துள்ளதாக தமிழ்நாடு முழுவதும் படத்தை வெளியிட்ட சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இன்று தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வசூலானது திரையரங்குகளில் வழக்கமான டிக்கெட் கட்டணத்தில் வசூலிக்கப்பட்டது என்றும், இது நடிகர் சூர்யாவின் அதிகபட்ச முதல்நாள் வசூல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று கர்நாடகாவின் விநியோகஸ்தரான ஸ்வாகத் எண்டர்பிரைசஸ், முதல் நாள் வசூல் 3.07 கோடி ரூபாய் வசூல் என்றும் கேரளாவி 2.5 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக உலகளவில் சுமார் ரூ.30 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக ரெட்ரோ தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துவரும் ஆதரவால் இரண்டாம் நாள் வசூல், முதல் நாளை விடவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
Tags:
cinema news