யாழ்ப்பாணம், வலி. வடக்கில் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக் கோரிய போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் உணர்வுபூர்வமாகத் தொடர்கிறது. மயிலிட்டி சந்தியில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டத்தில் இன்று 500இற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்று, தங்குதடையின்றி அமைதி வழியில் உணவு சமைத்து அங்கேயே தங்கியிருந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், பாடசாலைச் சிறுவர்கள் கூட தமது பெற்றோருடன் பதாகைகளைத் தாங்கியவாறு, மூன்றாம் தலைமுறையாக தங்கள் நிலங்களுக்கான உரிமையைக் கோரிப் போராட்டத்தில் இணைந்துள்ளனர். மயிலிட்டி, பலாலி, அந்தோணிபுரம், காங்கேசன்துறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த முதியவர்கள், இளைஞர்கள், பெண்கள் எனப் பல தரப்பினரும் இத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
1990ஆம் ஆண்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள், போர் முடிவடைந்த பின்னரும் தங்கள் காணிகளை முழுமையாகப் பெறவில்லை. ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் காணி விடுவிப்பதாகக் கூறி சிறிய பகுதிகளை மட்டுமே விடுவித்துள்ளன. இதனால், வாடகை வீடுகளிலும், உறவினர் வீடுகளிலும், முகாம்களிலும் காணி உரிமையாளர்கள் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர்.
"அனைத்துக் காணிகளையும் உடனடியாக விடுவிப்போம்" என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம், ஆறு மாதங்களாகியும் பெரிய அளவில் காணி விடுவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனப் போராட்டக்காரர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக இராணுவம் நிலங்களை வைத்திருப்பதாகவும், தற்போது அமைதியான சூழ்நிலை நிலவும் போதும் காணிகள் விடுவிக்கப்படாமல் இருப்பது மக்களைத் தொடர்ந்தும் அகதிகளாக்குகிறது எனவும் அவர்கள் வேதனையுடன் குறிப்பிட்டனர். தமிழ் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ளதாகக் கூறும் புதிய அரசாங்கம் இப் போராட்டம் குறித்து கவனம் செலுத்தும் வரை இது தொடரும் எனப் போராட்டக்காரர்கள் உறுதியளித்தனர்.