நயினாதீவு கடற்போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் : வேலணை பிரதேச சபையிடம் வலியுறுத்து..!!!


நயினாதீவின் கடற் போக்குவரத்தில் இருக்கும் இடர்பாடுகளை கழைந்து மக்களுக்கு பாதுகாப்புடன் கூடிய இயல்பான போக்குவரத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலணை பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வேலணைப் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வெள்ளிக்கிழமை தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதன்போது இவ்விடயம் குறித்து உறுப்பினர் கார்த்தீபனால் சபையில் முன்மொழிவு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.
இது குறித்து உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,

குறிகாட்டுவான் நயினாதீவு இடையேயான கடற் போக்குவரத்து சேவையை சீரமைப்பது அவசியமாகும்.
குறிப்பாக நாளாந்தம் ஆயிரக்கணக்கான பயணிகளின் போக்குவரத்து மார்க்கமாக இருக்கும் இந்த படகுப் போக்குவரத்து சேவையை தனியார் முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக 45 இற்கும் சற்று அதிக படகுகள் சேவையை முன்னெடுக்கின்றன.

ஆனால் குறித்த சேவையை முன்னெடுக்கும் படகுகள் சங்கம் சட்டபூர்வமான ஒன்றல்ல. அத்துடன் படகுகளும் சேவைக்கு உகந்த தரத்தில் இருப்பதில்லை என்றும், அவை தரச் சான்றிதள் எடுக்காது சேவையை முன்னெடுக்கின்றன என்றும் குற்றச்சாட்டுக்கள் வலுவாக இருக்கின்றன.

மேலும் பயணிகளிடம் அறவிடப்படும் கட்டணம், படகுச் சேவைக்கான வரி உள்ளிட்டவையும் முறையாக அறவிடப்படுவதாக தெரியவில்லை.

எனவே, படகுகளின் தரம், கட்டண அறவீடு, வரி அறவீடு, சங்கம் மற்றும் படகுகளின் பதிவுகள் என்பவற்றை ஒரு முறையான பொறிமுறையை உருவாக்கி மக்களுக்கான போக்குவரத்து சேவையை பாதுகாப்பானதாக முன்னெடுக்க பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

குறித்த விடயத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்ட சபையின் உறுப்பினர்கள் தத்தமது கருத்துக்களை முன்வைத்த நிலையில் அது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வேறு இடங்களில் இருந்து வரும் படகுகளுக்கும் வரி அறவீடு செய்யப்படும் என்றும் தவிசாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here