உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தொடர்பிலான அறிவுறுத்தல்..!!!



உயர்தரப் பரீட்சைக்கு மாணவர்கள் அமைதியாக முகங்கொடுக்கத் தேவையான சூழலை அமைத்துக்கொடுக்குமாறு, பெற்றோர்களிடம் கோரிக்கை விடுப்பதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

அத்துடன் மாணவர்களை நல்ல மனநிலையுடன் பரீட்சைக்கு தயார்ப்படுத்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல், டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

நாடு முழுவதும் 2,362 பரீட்சை நிலையங்களில் உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.

இந்த முறை பரீட்சைக்காகப் பாடசாலை விண்ணப்பதாரர்கள் 246,521 பேரும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் 94004 பேரும் தோற்றவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வினாத்தாள்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கடந்த வருடத்தைப் போலவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, மாணவர்கள், தமக்கு வழங்கப்பட்டுள்ள நேர அட்டவணைக்கு அமையப் பரீட்சைக்கு நன்கு தயாராகுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, உயர்தரப் பரீட்சைக்காக நடத்தப்படும் அனைத்து தனியார் வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகள் உட்பட பரீட்சை தொடர்பான அனைத்து விளம்பர நடவடிக்கைகளும் நாளை நள்ளிரவு 12 மணி முதல் தடை செய்யப்படவுள்ளன.

அத்துடன், பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள் இன்று முதல் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று அதனைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here