கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்பாக நேற்று காலை மோட்டார் சைக்கிளை டிப்பர் வாகனம் மோதித் தள்ளிய நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் செய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனம் நிறுத்தாமல் தப்பிச்சென்ற நிலையில் பொதுமக்கள் துரத்திச் சென்று வாகனங்களை தடுத்து நிறுத்தி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதேவேளை இது விபத்து சம்பவம் அல்ல திட்டமிட்ட கொலை முயற்சியாக இருக்கலாம் என மோட்டார் சைக்கிளில் பயணித்தவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், கடந்த வருடம் நவம்பர் மாதம் திருவையாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வினை தடுக்க முயன்ற இளம் குடும்பஸ்தர், மணல் ஏற்றிவந்த டிப்பர் வாகனம் மோதியதில் உயிரிழந்தார். அந்த விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனம் நீதிமன்றத்தினால் பிணைமுறியில் விடுவிக்கப்பட்ட நிலையில், அதனை மற்றொரு டிப்பர் வாகனத்தின் மூலம் பொலிஸ் நிலையத்திலிருந்து இழுத்துச் சென்றபோது நவம்பர் மாதம் விபத்தில் உயிரிழந்தவரின் சகோதரனின் மோட்டார் சைக்கிளை மோதியுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் திட்டமிட்ட கொலை முயற்சியாக இருக்கலாம் என உறவினர்கள் கூறியுள்ளனர். சம்பவத்தையடுத்து டிப்பர் வாகனங்களை பொலிஸார் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
Tags:
sri lanka news
