வடமராட்சி மந்திகை பகுதியில் உள்ள சந்திகளில் போதிய வெளிச்சமின்மையால் இரவு நேரங்களில் பயணிப்போர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பருத்தித்துறை நகருக்கு அருகில் உள்ள நகராக மந்திகை பகுதி காணப்படுகின்றது. மந்திகை பகுதியிலேயே பருத்தித்துறை பிரதேச சபையின் தலைமைக் காரியாலயமும், புலோலி உப அலுவலகமும் அமைந்திருக்கின்றன. ஆனாலும் மந்திகை பகுதியில் உள்ள வீதி விளக்குகளை பிரதேச சபை சீர் செய்யாமை குறித்து பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் வடமராட்சி, வடமராட்சி கிழக்கு, மற்றும் தென்மராட்சி மக்கள் அதிகமாக சென்றுவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையும் மந்திகையிலேயே உள்ளது.
24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள நிலையில் மந்திகையில் உள்ள புலோலி பாடசாலை சந்தி, சிலையடிசந்தி, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சந்தி, மந்திகை நாற்சந்தி என்பவற்றில் மேற்குரி மின்குமிழ்கள் இன்மையால் இரவு நேரங்களில் வைத்தியசாலைக்கு வருவோர், பஸ்களில் பயணம் செய்து நடந்து செல்வோர் மற்றும் துவிசசக்கர வண்டிகளில் செல்வோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதுடன் விபத்துக்களையும் சந்திக்கின்றனர்.
இது தவிர சந்தை ஒழுங்கை, சாவகச்சேரி வீதி என்பவற்றிலும் மின்குமிழ்கள் இருக்கின்ற போதிலும் அவை ஒளிராத நிலையில் காணப்படுகின்றன.
எனவே பலதரப்பட்ட மக்களின் 24 மணி நேர பயன்பாட்டில் உள்ள மேற்படி சந்திகள் வீதிகளில் உள்ள மின் விளக்குகளை ஒளிரச் செய்ய பருத்தித்துறை பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.