இலங்கையின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் மேலதிக எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது.
இது குறித்து பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவிக்ககையில்,
35,500 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிய கப்பலொன்று நேற்று (25) நாட்டை வந்தடைந்துள்ளதுடன், அதிலுள்ள எரிபொருளைத் தரையிறக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இம்மாதத்திற்குள் மேலும் இரண்டு எரிபொருள் கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளன.
அதன்படி,முதலாவது கப்பலில் 30,000 மெற்றிக் தொன் 92 ரக பெற்றோல் மற்றும் 5,000 மெற்றிக் தொன் 95 ரக பெற்றோலும் இரண்டாவது கப்பலில் 32,000 மெற்றிக் தொன் டீசல் மற்றும் 8,000 மெற்றிக் தொன் விமான எரிபொருளும் கொண்டுவரப்படவுள்ளது.
இதன்படி, எதிர்வரும் மே மாதம் வரை நாட்டுக்குப் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக அவர் இதன்போது உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை தற்போது நாட்டில் நடைமுறையிலுள்ள எரிபொருள் QR குறியீடு முறைமையின் கீழ் 6 மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்கள் பதிவு செய்துள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
Tags:
sri lanka news