தெனியாய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இன்ஃபுளுவென்சா (Influenza) போன்ற ஒரு வகை வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதன் காரணமாக, தெனியாய கல்வி வலயத்திலுள்ள நான்கு முக்கிய பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் குறித்து தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் நிசாக ஹெட்டிகொட தெரிவிக்கையில்,
பாடசாலை மாணவர்களிடையே இந்த வைரஸ் தொற்று மேலதிகமாகப் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தப் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
தென் மாகாண ஆளுநர் அலுவலகத்தினால் வழங்கப்பட்ட ஆலோசனைகளுக்கு அமையவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தெனியாய தேசிய பாடசாலை, தெனியாய புனித மெத்யூஸ் இருமொழிப் பாடசாலை , தெனியாய ராஜபக்ச வித்தியாலயம் ,பல்லேகம சித்தார்த்த ஆரம்பப் பாடசாலை ஆகிய நான்கு பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று (07) மற்றும் நாளை (08) ஆகிய இரண்டு நாட்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
சுகாதார நிலைமைகளைக் கருத்திற்கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பெற்றோர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை, காய்ச்சல் அறிகுறிகள் தென்படும் மாணவர்களை உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:
sri lanka news