| File image |
யாழ்ப்பாணத்தில் 21 இலட்ச ரூபாய் போலி நாணயத்தாள்கள் மற்றும் அதனை அச்சிட பயன்படுத்திய உபகரணங்கள் என்பவற்றுடன் கைதான நபருக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்று 06 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு 21 இலட்ச ரூபாய் பெறுமதியான போலி 5 ஆயிரம் நாணய தாள்கள் மற்றும் அதனை அச்சிடுவதற்கு பயன்படுத்திய உபகரணங்கள் என்பவற்றுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அது தொடர்பிலான வழக்கு யாழ் மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் , இன்றைய தினம் குறித்த வழக்கு தீர்ப்புக்காக எடுத்து கொள்ளப்பட்ட போது , குறித்த நபரை குற்றவாளியாக கண்ட மன்று 06 வருட கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கியது.
அதன் போது குற்றவாளி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி , குறித்த சிறைத்தண்டனையை ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனையாக வழங்க ,மன்றில் விண்ணப்பம் செய்தார்.
அதனை நிராகரித்த மன்று , போலி நாணய தாள்களை புழக்கத்தில் விடுவது நாட்டின் பொருளாதார கட்டமைப்பையே பாதிக்கும் செயல். இது நாட்டிற்கு பேரழிவை தர கூடியதும் என்பதனை மன்று கருத்தில் கொண்டு , குற்றவாளிக்கு 06 ஆண்டு கால சிறைத்தண்டனையை உறுதி செய்வதாக மன்று தெரிவித்தது.