சிவாஜிலிங்கம் கைது..!!!


வடக்கு மாகாணத்தின் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கு விசாரணைக்கு அமைய வழங்கப்பட்ட பிடியாணையின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தீவிரவாத ஒழிப்பு தொடர்பான தற்காலிக விதிமுறை சட்டத்தின் கீழ் குறித்த வழக்கு இடம்பெறுவதாக, ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

இன்றையதினம் (05) முற்பகல் 9.25 மணியளவில், வல்வெட்டித்துறை, அம்மன் கோவிலடி பிரதேசத்திலுள்ள அவரது வீட்டில் வைத்து வல்வெட்டித்துறை பொலிஸார் எம்.கே. சிவாலிங்கத்தை கைது செய்துள்ளனர்.

அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இன்றையதினம் (05) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

இதேவேளை இன்றைய தினம் (05) தமிழீழ விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் தினம் என்பதால், வடமராட்சி உள்ளிட்ட யாழின் பல பகுதிகளில் இராணுவத்தினர் மோட்டார் சைக்கிளில் வீதி ரோந்து பணிகளிலும் ஈடுபட்டுள்ளதாக, எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here