சமூகத் தொற்று தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
கொரோனா வைரஸ் தொற்று இலங்கையை பொறுத்தவரை தற்பொழுது கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. வடக்கு மாகாண மக்கள் சமூக தொற்றுத் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியுள்ளது.
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள் மற்றும் சமூக இடைவெளியினைப் பேணி சமூகத் தொற்று ஏற்படாவண்ணம் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
அரேபிய நாடுகளில் இருந்து இலங்கை திரும்புபவர்கள் வடக்கு மாகாணத்தின் பல்வேறு தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். சமூகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் இனங்காணப்படாத போதிலும், மக்கள் சமூகத்தொற்று தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்றார்.