யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பு, அதனால் ஏற்பட்ட அமைதியின்மை நிலமைகள் அமைதியான முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
இன்று வியாளக்கிழமை காலை, கலைப்பீடத்தின் இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு முற்றியதில், வளாகத்துக்கு முன்னால் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக கைகலப்பாக மாறியிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் மாணவர் ஒழுக்காற்று உத்தியோகத்தர்களால் மாலையில் நடாத்தப்பட்டது. இந்த விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த சமயம் இரு மாணவர் குழுக்களும் மீண்டும் முரண்பட்டுக் கொண்டன.
மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து, சம்பவ இடத்திலிருந்த கலைப்பீடாதிபதின் அழைப்பை அடுத்து, மாணவ ஆலோசகர்கள், பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் சில கலைப்பீட விரிவுரையாளர்கள் சகிதம் துணைவேந்தர் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளார். அந்த இடத்தில் மாணவர் குழுக்களுக்கடையிலான மோதல் நிலையைச் சுமூகமாகத் தீர்க்கும் முயற்சியில் - இரண்டாம் வருட மாணவர்களுக்களைப் பாதுகாப்பாக அந்த இடத்திலிருந்து வெளியேற்றும் போது மூன்றாம் வருட மாணவர்கள் தள்ளுமுள்ளுப் பட்டுக்கொண்டதாகவும், அவ்வேளையில் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்குப் பரஸ்பரம் பலப்பிரயோகம் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் பற்றித் தகவல் அறிந்த கோப்பாய் பொலிசார் சம்பவ இடத்துக்கு வருகை தந்திருந்தனர். மாணவர்களின் வேண்டுகோளை அடுத்து பல்கலைக்கழக வளாகத்திலிருந்து பொலிசாரை வெளியேறுமாறு துணைவேந்தர் கேட்டுக்கொண்டதையடுத்து பொலிசார் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறி, வெளியில் நிலை கொண்டிருந்தனர்.
மிக நீண்ட நேர விவாதத்தின் பின் மாணவர்களிடம் பேசிய துணைவேந்தர், நாளை - வெள்ளிக்கிழமை சுயாதீன விசாரணை ஒன்றுக்கு ஏற்பாடு செய்வதாகவும், நாளை மாலை 3.00 மணியளவில் விசாரணை இடம்பெறும் என்றும் அறிவித்ததோடு, மாணவர்களை அமைதியான முறையில் கலைந்து செல்லுமாறும் கேட்டுக் கொண்டார். துணைவேந்தரின் வேண்டுகோளின் பின்னர் சிறிது நேரத்தில் மாணவர்கள் அமைதியாகக் கலைந்து சென்றனர்.
மாணவர் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று பின்னிரவு மாணவர் ஆலோசகர் ஊடாகத் துணைவேந்தருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.