ஆதரவாளர்களின் கூட்டத்தில் முகக்கவசத்தை எறிந்த டிரம்ப்..!!!
கொரோனாவிலிருந்து மீண்ட பின்னர் முதன்முறையாக தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது ஆதரவாளர்களை முத்தமிடத் தயார் எனக் கூறி முகக்கவசத்தை தூக்கி எறிந்துள்ளார்.
வைரஸ் தொற்று உறுதியான நிலையில் இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டிரம்ப், நான்கு நாள் சிகிச்சைக்குப் பின்னர் வெள்ளை மாளிகை திரும்பியிருந்தார். அவர் கடந்த திங்கட்கிழமை மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தைத் ஆரம்பித்துள்ளார்.
புளோரிடாவின் சான்போர்டில் நடந்த பேரணியில் டிரம்ப் பங்கேற்றார். சமூக இடைவெளி இல்லாமல் நடைபெற்ற இந்தப் பேரணியில் பெரும்பான்மையானோர் முகக்கவசமின்றி பங்கேற்றனர். இதில் பேசிய டிரம்ப்், “நான் இப்போது கொரோனாவைக் கடந்துவிட்டேன். நான் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவன் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். நான் மிகவும் சக்திவாய்ந்தவனாக உணர்கிறேன்” எனத் தெரிவித்தார்.
மேலும் ”உங்கள் அனைவரையும் நான் முத்தமிடுவேன். ஆண்களையும், அழகான பெண்களையும் முத்தமிடுவேன்” எனக்கூறி தனது முகக்கவசத்தை ஆதரவாளர்களை நோக்கி வீசி எறிந்தார்.
கொரோனா தொற்று விவகாரத்தில் டிரம்ப் தொடர்ந்து அலட்சியமாக செயல்பட்டு வருவதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் இதுவரை 8 மில்லியனுக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,20000 க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.