Sunday 29 November 2020

யாழ். குடாநாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் இல்லை - சுகாதார சேவைகள் பணிப்பாளர்..!!!

SHARE


யாழ்ப்பாண குடாநாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் இல்லை எனவும், மக்கள் குழப்பமடைய தேவையில்லை என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணக் குடாநாட்டை முடக்குவது தொடர்பில் தீர்மானம் என சில பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளதாகவும், அது பிழையான செய்தி என தெரிவித்த வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவ்வாறு எந்த ஒரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக காரைநகர் பகுதியில் கொழும்பிலிருந்து வருகை தந்த ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் காரைநகர் பகுதியில் அவரிடம் நேரடியாக தொடர்புகளைப் பேணிய 21 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர் சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள் எனவும், அவர்களுக்கு நாளைய தினம் பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பிசிஆர் பரிசோதனை முடிவில் பலருக்கு தொற்று இனங் காணப்பட்டால் மாத்திரமே சில வேளைகளில் காரைநகர்  பிரதேசம் முடக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றதாகவும், எனினும் அது தொடர்பில் தற்போது வரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE