Tuesday 24 November 2020

யாழ்ப்பாணம் மாநகரில் வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி..!!!

SHARE


யாழ்ப்பாணத்தில் 70 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

“யாழ்ப்பாணம் கந்தபுராண வீதிப் பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு கடந்த 11ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டியிலிருந்து வருகை தந்த அவர் கிளிநொச்சிக்கும் வான் ஒன்றில் சென்று வந்துள்ளார்.

அவர் கொழும்பிலிருந்து வருகை தந்தமை அறிவிக்கப்படாத நிலையில் கடந்த 15ஆம் திகதி சுகாதாரத் துறையினர் கண்டறிந்து அவரைத் சுயதனிமைப்படுத்தினார்கள். அவருடன் வீட்டில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவரிடம் மாதிரிகள் பெறப்பட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 121 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. அவர்களில் காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் இரண்டு கடற்படையினருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஏனையோருக்கு தொற்று இல்லை” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

SHARE