கொரோனா முன்னெச்சரிக்கை சுகாதார நடைமுறைகளில் சில தளர்வுகள் – அரசாங்க அதிபர் தெரிவிப்பு..!!!




யாழ். மாவட்டத்தில் பேணப்பட்ட சுகாதார நடைமுறைகளில் இன்று முதல் சில தளர்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் க மகேசன் தெரிவித்தார்.

தற்போதைய கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பரில் இன்று வரை 26 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இவர்களுடன் தொடர்புகளைப் பேணிய 874 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐந்து பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சுகாதார நடைமுறைகளில் சில தளர்வுகளை மேற்கொள்வதற்கு சுகாதாரப் பகுதியினர் தீர்மானித்துள்ளனர். கொரோனா கட்டுப்பாட்டு செயலணியும் இதற்கு அனுமதி அளித்துள்ளது. எனவே யாழ்ப்பாண மாவட்டத்தில் சில சுகாதார நடைமுறைகளில் தளர்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன் படி இன்று முதல் தளர்த்தப்படவுள்ள நடைமுறைகள் வருமாறு :

வணக்க ஸ்தலங்களில் – வழிபாட்டு இடங்களில் ஒரே தடவையில் 50 பேர் கலந்து கொள்வதற்காக அனுமதிக்கப்படுவார்கள். ஆலயங்களில் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி கொள்வது அவசியமாகும். அத்தோடு கட்டாயமாகக் கைகழுவி, முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளிகளைப் பேணி ஆலய வழிபாட்டில் கலந்து கொள்ள வேண்டும். உள்ளே செல்லும் பக்தர்கள் தங்களுடைய பெயர் விவரங்களைப், பதிவு செய்து ஆலயத்திற்குள் செல்வது அவசியமாகும்.

ஹோட்டல், திருமண மண்டபங்களில் கூட்டங்கள், கருத்தரங்குகள் செயலமர்வுகள் 50 பேராக மட்டுப்படுத்தி செயற்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கூட்டங்கள் மற்றும் செயலமர்வுகள் நடத்த விரும்புபவர்கள் முன் கூட்டியே சுகாதாரப் பகுதியினரிடம் குறித்த அனுமதியை விண்ணப்பித்து அதனைப் பெற்று நடாத்த வேண்டும்.

அதே நேரம், திருமண மண்டபங்களில் திருமண நிகழ்வுகள் மற்றும் ஏனைய நிகழ்வுகள் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

இந்த நிலைமைக்கு மேலதிகமாக, அத்தியாவசிய தேவைகளுக்காக பயணத்தில் ஈடுபடுபவர்கள் அதாவது வெளி மாவட்டங்களுக்கு பயணிப்போர் ,அரச உத்தியோகத்தர்கள்,தொழில் ரீதியாக வெளி மாவட்டத்திற்கு செல்பவர்களும் சுயதனிமைப் படுத்தலிருந்து விலக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே அத்தியாவசிய சேவைகள் ஈடுபடுவர்கள் மற்றும் தொழில் ரீதியாக அடையாள அட்டையுடன் வெளி மாவட்டங்களுக்கு சென்று வருபவர்களும் சுயதனிமைப் படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் அவ்வாறானவர்களுக்குத் தனிமைப்படுத்தல் நிறுத்தப்பட்டுள்ளது.

தொழில் நிமித்தம் வெளி மாகாணங்களுக்கு சென்று வருபவர்களுக்கும் இந்த நடைமுறை செயற்படுத்தப்படும் அதே நேரத்தில் அதிகூடிய அபாய பிரதேசத்தில் இருந்து வருபவர்கள் அவர்களுடைய நிலைமை குறித்து சுகாதார பிரிவினரின் அறிவறுத்தலின் படி செயற்படலாம். அத்தகையவர்கள், தமது விபரங்களைத் தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தனிமைப்படுத்தல் தேவையா – இல்லையா என்பது தொடர்பில் சுகாதார பிரிவினர் ஆலோசனை வழங்குவார்கள்.

வெளி மாகாணத்திலிருந்து உத்தியோக நிமித்தம் கடமை நிமித்தம் வந்து செல்பவர்களுக்கு தனிமைப்படுத்தல் இல்லை எனவே இந்த விடயங்களை அனுசரித்து பொதுமக்களும் உத்தியோகத்தர்களும் ஏனைய அமைப்புகளும் நடந்துகொள்வது அவசியமாகும். விழாக்கள் மற்றும் திருமணம் நிகழ்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வழிகாட்டலுக்கமைய வீடுகளிலேயே நடாத்தப்பட வேண்டும். மண்டபங்களிலும் ஆலயங்களிலும் திருமண நிகழ்வுகளை அல்லது ஏனைய நிகழ்வு தற்போது நடாத்தத் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாண மாவட்டம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதற்கு பொதுமக்களுடைய பங்களிப்பே முக்கியமான காரணமாகும் அத்தோடு சுகாதார திணைக்களம் மற்றும் ஏனைய திணைக்களங்களின் ஒத்துழைப்பும் எமது யாழ் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருப்பதற்குஒரு காரணமாகும்.

எனவே ஒரு சிலர் பொறுப்பற்ற விதத்தில் செயற்படும் போது அது அனைவருக்கும் ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்து விடும். அனைவரும் பொறுப்பாக செயற்பட வேண்டும் என்றார்.

Put your ad code here

Previous Post Next Post